ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு விசாரணை: ஆகஸ்ட் 21க்கு ஒத்திவைப்பு
சென்னை: ஜெயலலிதா வருமானவரி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21ம் தேதிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஜெயலலிதா கடிதம் தொடர்பாக பரிசீலித்து வருவதால் அவகாசம் தேவை என வரித்துறை கோரிக்கை விடுத்துள்ளது. வரித்துறை கோரிக்கையை ஏற்று வழக்கை நீதிபதி தட்சணாமூர்த்தி ஒத்திவைத்தார்.
முதல்வர் ஜெயலலிதாவும் சசிகலாவும் கடந்த 1993-1994-ஆம் ஆண்டுக்குரிய வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இதேபோல அவர்கள் இருவரும் பங்குதாரர்களாக இருந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம், கடந்த 1991 - 1992, 1992-1993 ஆகிய நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக ஜெயலலிதா, சசிகலா மீதும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மீதும் வருமான வரித்துறை கடந்த 1996, 1997-இல் வழக்கு தொடுத்தது.
விடுவிக்க கோரி மனு
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதாவும் சசிகலாவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறப்பு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்றம்
இந்த உத்தரவின்படி எழும்பூரில் உள்ள சென்னைப் பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த ஜூலை 24ம் தேதி வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
சமரச முறையில் தீர்வு
அப்போது ஜெயலலிதா, சசிகலா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இந்த வழக்கை சமரச முறையில் நாங்கள் எதிர்கொள்ளும் விதமாக வருமான வரித்துறையிடம் அண்மையில் மனு தாக்கல் செய்தோம். இது தொடர்பாக எங்களது கணக்கு அதிகாரி கடந்த 11-ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார். இதையடுத்து அவர்கள், இந்த மாதம் 28-ஆம் தேதி அவரை மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர். எனவே வருமான வரித்துறையினர் அந்த மனு மீது முடிவு எடுக்கும் வரை, நீதிமன்றத்தில் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று அவர்கள் மனுவில் கோரியிருந்தனர்.
வருமான வரித்துறை அறிக்கை
இதையடுத்து நீதிபதி ஆர். தட்சிணாமூர்த்தி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் அன்று, வருமான வரித்துறையினர், மனுதாரர்களின் சமரசத் திட்டம் குறித்த அப்போதைய நிலை பற்றிய அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆகஸ்ட் 21க்கு ஒத்திவைப்பு
இதனிடையே இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா கடிதம் தொடர்பாக பரிசீலித்து வருவதால் அவகாசம் தேவை என வரித்துறை கோரிக்கை விடுத்துள்ளது. வரித்துறை கோரிக்கையை ஏற்று வழக்கை நீதிபதி தட்சணாமூர்த்தி ஆகஸ்ட் 21ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.