பிள்ளையாரப்பா... "அம்மா" சீட் தரணும்ப்பா... சிதறு தேங்காய் போடும் அதிமுகவினர் !
சென்னை: பிள்ளையாரப்பா எப்படியாவது எனக்கு சீட் கிடைக்கணும்பா என்ற வேண்டுதலுடனேயே போயஸ்கார்டனுக்குள் நுழைகின்றனர் அதிமுகவினர். போட்டியிட சீட் கிடைத்து வெற்றி பெற்றால் எம்.எல்.ஏ., அம்மாவின் அருட்பார்வை பட்டால் அமைச்சராகி சுழல் விளக்கில் வலம் வருவது உறுதி என்று தெரிந்துதான் நம்பிக்கையுடன் ஜெயலலிதாவை சந்திக்கச் செல்கின்றனர் விருப்பமனு கொடுத்தவர்கள்.
அதிமுகவில் சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விருப்பமனு அளித்தவர்களிடம் 7 நாட்கள் நேர்காணல் நடைபெற்றுள்ளது. 8வது நாளான இன்று கோவை, திருப்பூர், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுகவினரிடம் ஜெயலலிதா நேர்காணல் நடத்துகிறார்.
கடந்த7ம் தேதி முதல் நடைபெற்று வரும் நேர்காணலில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து 2ம் கட்ட நேர்காணல், கடந்த 21ம் தேதி தொடங்கியது. 7 நாட்கள் நேர்காணல் நடைபெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்
ஜெயலலிதாவே நேரடியாக நேர்காணல் நடத்துவதால் விருப்பமனு கொடுத்தவர்கள் குஷியோடு இன்டர்வியூவிற்கு செல்கின்றனர்.7வது நாளான நேற்று தேனி மாவட்டம் பெரியகுளம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், திண்டுக்கல், நிலக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை, கந்தவர்வகோட்டை, ஆலங்குடி ஆகிய தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

ஜெ. நேரடியாக கேள்விகள்
ஒவ்வொரிடமும் தனித்தனியாக தொகுதி நிலவரம், குடும்ப சூழல், கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை ஜெயலலிதா கேட்டறிந்தார். பிற்பகலில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நேர்காணலுக்காக காத்திருந்தனர்.

திடீர் ரத்து ஏன்
திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி தொகுதிகளுக்காக விருப்ப மனு அளித்தவர்கள் வந்திருந்தனர். ஆனால், பிற்பகலில் நேர்காணல் ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கு திங்கட்கிழமையான இன்று நேர்காணல் நடக்கும் என கூறப்பட்டது.

திருப்பூர் - கோவை
8ம் நாளான இன்று டெல்டா மாவட்ட அதிமுகவினருடன், திருப்பூர், கோவை மாவட்ட அதிமுகவினரும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக போயஸ்கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடரும் நேர்காணல்
இதுவரை 10 மாவட் டங்களுக்கான நேர்காணல் முடிந்துள்ளது. இதிலும், சில தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்கவில்லை. எனவே, அந்த தொகுதிகளைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு அழைப்பு வரும் என்ற எதிர்பார்ப்புடன் சென்னையிலேயே தங்கியுள்ளனர். இன்னும் சில தினங்களுக்கு நேர்காணல் தொடரும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

களைகட்டும் போயஸ்கார்டன்
ஜெயலலிதா நேர்காணல் நடத்துவதால் விருப்பமனு கொடுத்துள்ளவர்கள் பலரும் போயஸ்கார்டனில் உள்ள பிள்ளையாரிடம் பலரும் அப்ளிகேசன் போட்டு வருகின்றனர். ஜெயலலிதாவின் புகைப்படத்தை கையில் ஏந்தியவாறு பலரும் போயஸ்கார்டனுக்கு வருகை தருகின்றனர்.

சின்னஞ்சிறு கடைகள்
நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களுடன் அவர்களின் ஆதரவாளர்களும், போயஸ்கார்டனில் குவிந்து வருவதால் அங்கு சிறு வியாபாரிகள் கடை விரித்துள்ளனர். சிநாக்ஸ், வாட்டர் பாட்டில், கூல்டிரிங்க்ஸ் என போயர்கார்டன் ஏரியா சாலைகளில் விற்பனை களை கட்டியுள்ளது.

ஜெயலலிதா அறிவுரை
நேர்காணல் ஒருபக்கம் நடந்து வரும் நிலையில் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கியுள்ளார். கழகத்தின் பூத் ஏஜெண்ட்டுகள் தங்கள் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட இடங்களில் வீடு வீடாகச் சென்று முறையாக ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலை சரிபார்த்திட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மகத்தான வெற்றி
அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் தலைமை ஏற்ற நாளில் இருந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க எண்ணற்ற வெற்றிகளை பெற்றுத் தந்திருக்கிறேன். கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் நாடே திரும்பிப் பார்த்து வியப்படையும் மகத்தான வெற்றியைக் கழகம் பெற்றதைப் போலவும், இன்னும் ஒரு படி கூடுதலாக அதை விடவும் சிறப்பான வெற்றியைப் பெறும் வகையில் நான் திட்டமிட்டு உழைத்து வருகிறேன்.

அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்வு
என்னுடைய பாதையில் களப்பணியாற்றிட கழக உடன் பிறப்புகள் ஒவ்வொருவரையும் அன்புடன் அழைக்கிறேன். என்னுடைய வாழ்வு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்வு. என்னுடைய வெற்றி கழகத்தின் வெற்றி. என்னுடைய உழைப்பு தமிழகம் உயர்ந்திடவே. வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரட்டும் என்றும் கூறி ஜெயலலிதா தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications