அண்ணா, பெரியார், காமராஜர், எம்.ஜி.ஆர் வரிசையில் அழியா புகழ் பெற்ற ஜெயலலிதா
மரணம் பலருக்கு சம்பவமாகும், சிலருக்கு மட்டுமே சரித்திரமாகும். அண்ணா, பெரியார், காமராஜர், எம்ஜிஆர் ஆகிய தமிழக அரசியல் தலைவர்கள் மரணம் சரித்திர சாதனையானது அந்த வரிசையில் இணைந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
சென்னை: அண்ணா, பெரியார், காமராஜர், எம்.ஜி.ஆர் ஆகியோர் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள் போல முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கும் லட்சக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.
யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்? என்று கேட்பார்கள். ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அவரது மரணம் கூறிவிடும். ஒருவரின் பெருமையையும், புகழையும். அவரின் மரணத்திற்கு மற்றவர்கள் விடும் கூறும் என்பார்கள்.
மரணத்தை வென்ற மகான்களாய் இன்றைக்கும் தமிழக தலைவர்கள் அண்ணா, பெரியார், காமராஜர், எம்ஜிஆர் இருக்கின்றனர். அந்த வரிசையில் அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இணைந்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து அவரின் உடல் முக்கியத் தலைவர்கள், பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்படுகிறது. முதல்வரின் உடலை காண்பதற்கு பல்வேறு இடங்களிலிருந்து பொதுமக்கள், முக்கியத் தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அரசியல் தலைவர்கள்
இதேபோல், கடந்த காலங்களில் இதே ராஜாஜி அரங்கில் முன்னாள் முதல்வர் அண்ணா, தந்தை பெரியார், காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோரின் உடலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போதும் லட்சக்கணக்கான தொண்டர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

அண்ணாவின் மறைவு
1969 பிப்ரவரி 2ம் தேதி. அண்ணாவின் திடீர் என மரணமடைந்தார். அவரது மறைவு நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது. அண்ணாவின் மறைவு அவரது தொண்டர்களின் தலையில் பேரிடியாய் இறங்கியது. அவரின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்

பெரியார் மறைவு
டிசம்பர் 24, 1973ம் ஆண்டு பெரியார் தனது 94 ஆம் வயதில் மறைந்தார். இவரது உடலும் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பெரியாரின் தொண்டர்கள் மட்டுமல்லாது பல ஆயிரக்கணக்கான திராவிட இயக்கத் தொண்டர்களும், தமிழக மக்களும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்.

காமராஜர் மறைவு
மக்கள் முதல்வராய் வாழ்ந்த காமராஜர் 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த தினத்தில் உறக்கத்திலேயே மரணமடைந்தார். காமராஜ் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் காந்தி ஜெயந்தி விழாக் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

மக்கள் வெள்ளம்
கிராமங்கள், நகரங்களில் எல்லாம் தெருக்களிலும் வீடுகளிலும் தலைவர் படத்துக்கு மலையிட்டு தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. ராஜாஜி மண்டபம் மக்கள் கடலால் முற்றுகையிடப்பட்ட சிறு தீவு போல் விளங்கியது. மக்கள் வெள்ளத்தைச் சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினார்கள். மூவர்ணக் கொடியால் காமராஜரின் உடல் போர்த்தப்பட்டு, ராஜாஜி மண்டபத்தின் முன்பகுதியில் வைக்கப்பட்டது. காமராஜரின் மறைவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சிலர் மயங்கி விழுந்தனர். மாரடைப்பு ஏற்பட்டு இரண்டு பேர் மரணம் அடைந்தனர். தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன. காமராஜரின் உடலைக் கண்டு அஞ்சலி செலுத்த வந்த கூட்டம் வினாடிக்கு வினாடி அதிகரித்தது.

எம்.ஜி.ஆர் மறைவு
டிசம்பர் 24, 1987ல் அதிகாலை எம்ஜிஆர் மறைந்ததாக செய்தி வெளியிடப்பட்டது. இதையறிந்த ஜெயலலிதா ராமாவரம் தோட்டத்துக்கு தலைவரை காண ஓடினார். இருப்பினும் அவரை உள்ளே அனுமதிக்க மறுக்கப்பட்டது. அதன்பின் எம்ஜிஆரின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட பொழுது கிட்டத்தட்ட 2 நாட்கள் உடலருகே நின்றிருந்தார். அதன் பின் எம்ஜிஆரின் உடல் ராணுவ வண்டியில் ஏற்றப்பட்ட பொழுது, ஜெயலலிதாவும் ஏற முயன்றார். ஆனால் அவரை எம்ஜிஆரின் உறவினரான நடிகர் தீபனால் கீழே பிடித்து தள்ளிவிடப்பட்டார். மேலும் கேபி ராமலிங்கத்தால் இழிவாக பேசப்பட்டார்.

எம்.ஜி.ஆர் அருகில் மீளா உறக்கம்
பல அவமானங்களையும், துன்பங்களையும் தாண்டி தற்போது மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து, முதல்வராக இருந்த நிலையில் மரணமடைந்து அதே ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளார். லட்சக்கணக்கான தொண்டர்கள் தங்கள் அன்பு அம்மாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தனது அரசியல் குருவின் சமாதி அருகிலேயே மீளா துயில் கொள்ளப் போகிறார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications