லோக்சபா தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கினார் ஜெயலலிதா! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!!
காஞ்சிபுரம்: லோக்சபா தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்கட்ட பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் இன்று தொடங்கினார் அக்கட்சிப் பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா. காஞ்சிபுரத்தில் பல்லாயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டு ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடும் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா கடந்த 24ம் தேதி வெளியிட்டார். கூட்டணியில் இடம்பெறும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டதும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் வாபஸ் பெறுவார்கள் என்றும் கூறினார்.
இன்னும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்த தொகுதி என்று அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஜெயலலிதா திட்டமிட்டபடி இன்று தனது தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கினார்.
இதற்காக சென்னையில் இருந்து இன்று மாலை போயஸ் தோட்டத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டார் ஜெயலலிதா. அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ஹெலிகாப்டரில் காஞ்சிபுரம் சென்றார். அங்கு அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவை வரவேற்றனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பட்டாச்சாரியார்களும் பூரணகும்ப மரியாதை அளித்தனர்.
பின்னர் ஹெலிகாப்டரில் இறங்குதளத்தில் இருந்து கார் மூலம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார் ஜெயலலிதா. ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் இருந்து பொதுக்கூட்ட மேடை வரை பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் சாலையின் இருபுறமும் நின்று ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் ஜெயலலிதா.
பின்னர் தேரடி வீதியில் பொதுக்கூட்ட மேடையில் தமது பிரசாரத்தை தொடங்கினார். தமது பிரசாரத்தின் போது காங்கிரஸ் அரசை அகற்றி மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் அரசு உருவாக வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.