அம்மா என்னா கலரு... வெயில்ல சும்மா தக தகன்னு இருக்காங்கல்ல... மதுரை பெண்களின் கமெண்ட்
மதுரை: என்னா கலரு.... என்னா கலரு... சாயந்தர வெயில்ல சும்மா தக தகன்னு இருக்காங்கப்பா என்று மதியம் வரை வெயிலில் காய்ந்து போயிருந்ததையும் மறந்து ஜெயலலிதாவை பார்த்த உடன் கமெண்ட் அடித்துள்ளனர் மதுரை பிரச்சாரத்திற்கு வந்த பெண்கள்.
மத்தியான வெயிலில் பிரச்சாரம் செய்ததால் சுருண்டு விழுந்து 5 பேர் பலியாகவே, எதிர்கட்சிகளின் கண்டனத்திற்கு ஆளானார் ஜெயலலிதா. இதனால் திருச்சியிலும், மதுரையிலும் பாதுகாப்பு வசதிகளோடு மாலையில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். என்னதால் மாலை 5 மணி என்று அறிவித்தாலும் காலை 10 மணியில் இருந்தே வேன்களும், பஸ்களும் மதுரையை நோக்கி வரத் தொடங்கின.
திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தஞ்சாவூர், தருமபுரி மாவட்டங்களில் புதிதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களையும் சேர்த்து 47 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

குவிந்திருந்த கூட்டம்
ஜெயலலிதா நேற்று மாலை 5.15 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் பிரச்சார மேடைக்கு 5.45 மணிக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரை பொதுமக்கள் கூட்டம் காத்திருந்து வரவேற்றது.

பிரியாணியுடன் 150 ரூபாய்
ஸ்பெசலாக தயாரிக்கப்பட்ட பிரியாணி பொட்டலம், தண்ணீர் பாக்கெட், கூடவே 150 ரூபாய் கொடுத்தனர். ஆண்கள் என்றால் கூடவே ஒரு குவாட்டர் பாட்டில் கொடுக்கப்பட்டது.

நல்லா சாப்பிடுங்க தெம்பா இருங்க
மதியமே மதுரைக்கு வந்தவர்கள் ரிங்ரோட்டில் நிழலான இடத்தில் அமர்ந்து ஆங்காங்கே சாப்பிட்டு விட்டு இளைப்பாறினர். விமானத்தில் இறங்கி இந்த வழியாகத்தான்போவாங்க ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க என்று சொல்லிவிட்டு போனார்கள் ஆண்கள். அவர்கள் வந்த வேலையை கவனிக்கணுமே.

காவலர்கள் பாடு திண்டாட்டம்
பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு மாலை 4 மணிக்குத்தான் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. அதனால், கடும் வெயிலில் காலை முதலே மாலை வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்கள் சோர்வடைந்து ஆங்காங்கே கட்டிடங்கள், பேனர்கள் கீழே நிழலைத் தேடி அலைந்தனர். சிலர் தரையில் படுத்து உறங்கினர்.

ஓடிய பெண்கள்
மதியம் முதலே ஆண்கள், பெண்களை போலீஸார் கூட்டம் நடந்த இடத்தில் அனுமதித்தனர். அப்போது வெயில் கடுமையாக அடிக்கத் தொடங்கியதும் உள்ளே சென்றவர்கள், நாங்கள் அம்மா வரும்போது வருகிறோம் என வெளியே வந்தனர். அவர்களிடம் உள்ளே சென்றால் வெளியே அனுப்பமாட்டோம் என போலீசார் திருப்பி உள்ளே அனுப்பினர்.

ஜெ. வந்த உடன் அலெர்ட்
விமானத்தை விட்டு ஜெயலலிதா இறங்கிவிட்டார் என்று சொன்ன உடனேயே ஆங்காங்கே அசந்து போய் அமர்ந்திருந்த காவலர்களும், பொதுஜனங்களும் வரிசையில் எழுந்து நின்று வரவேற்கத் தயாராகினர்.

அம்மா வந்தாச்சு
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் போன ஜெயலலிதாவை பார்த்த உடன் இரட்டை இலையைக் காட்டி உற்சாக குரல் எழுப்பினர். சிலரோ குலவை போட்டனர். சாயந்தர வெயில்ல சும்மா தக தகன்னு இருக்காங்க அம்மா என்றனர் சில பெண்கள்.

தொகுதிக்கு 10000
ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 10,000 பேர்வரை அழைத்து வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்த காரணத்தால் மதுரையில் கூட்டம் லட்சக்கணக்கில் திரண்டது. இடமில்லாத பலரும் ரிங் ரோட்டில் சாலை ஓரங்களில் தங்கினர்.

பேச்சை யாரு கேட்டா?
ஜெயலலிதா வந்து மேடையில் ஏறி இரட்டை இலை காட்டிய உடன் உற்சாகத்தில் குரல் எழுப்பியது கூட்டம். அதேபோல் என் அன்பான தாய்மார்களே என்ற போதும் கை தட்டல் எழுந்தது.

சரத்குமார் - கருணாஸ்
நடிகர் சங்க தேர்தலில் எதிர்எதிர் துருவங்களாக இருந்த நடிகர்கள் சரத்குமார், கருணாஸ் நேற்று ஒரே மேடையில் அதிமுக வேட்பாளர்களாக அமர்ந்திருந்தனர். ஜெயலலிதா வருவதற்கு முன் வரை அவர்கள் ஒருவரை ஒருவர் பரஸ்பர நலம் விசாரித்து பேசிக்கொண்டனர்.

பெயரை உச்சரிக்காத ஜெ.
மதுரையில் ஜெயலலிதா நேற்று அழகிரி பெயரை உச்சரிக்கவில்லை. கிரானைட் கொள்ளை பற்றி பேசும் போது பி.ஆர். பழனிச்சாமி பெயரையோ, முறைகேடு பற்றி ஆய்வு நடத்திய சகாயம் பெயரையோ உச்சரிக்கவில்லை.

டிவியில பார்த்து திரும்பிய கூட்டம்
பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கூட்டத்தினரை போலீசார் கண்காணித்தனர்.
மேடைக்கு வர முடியாதவர்கள் ஜெயலலிதாவின் பேச்சை கேட்கும் வகையில் ரிங் ரோட்டின் முக்கிய இடங்களில் எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டிருந்தன. அதை கேட்டு விட்டு ஊருக்கு கிளம்பினர்.












Click it and Unblock the Notifications