இடைத்தேர்தல் நாளன்று ஐசியூவிலிருந்து வெளியே வருகிறார் ஜெயலலிதா?
முதல்வர் ஜெயலலிதா வரும் 19ம் தேதி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா 19ம் தேதி, அதாவது இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தினத்தன்று, அப்பல்லோ மருத்துவமனையின், ஐசியூ பிரிவிலிருந்து தனிவார்டுக்கு மாற்றப்படுகிறார்.
உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். அதனை தொடர்ந்து அப்பல்லோ டாக்டர்களுடன் இணைந்து லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியதை தொடர்ந்து, அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து சீமா, மேரி சியாங் ஆகிய 2 பெண் பிசியோதெரபி நிபுணர்கள் உடற்பயிற்சி அளித்தனர்.
ஜெயலலிதா நலம் பெற அ.தி.மு.க. தொண்டர்கள் தீவிர பிரார்த்தனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, ஜெயலலிதா தொண்டர்களுக்கு கையெழுத்திட்டு எழுதிய கடிதம் அ.தி.மு.க.வினருக்கு புது உற்சாகம் அளித்துள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு 56வது நாளாக நேற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர் மேரி சியாங் நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். மாலை 5.55 மணியளவில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், அவர் தற்போது சிகிச்சை பெற்று வரும் அறையில் இருந்தபடி டிவியில் செய்தி சேனல்களை நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார் என்றும், மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் இயல்பாக பேசி வருகிறார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, ஜெயலலிதாவை சனிக்கிழமை தனிவார்டுக்கு மாற்ற இருப்பதாகவும், அந்த தனிவார்டில் டாக்டர்கள் கண்காணிப்பில் அவர் இருந்து அதன்பிறகு ஒரு வாரத்தில் வீடு திரும்புவார் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications