வரிசையில் நிற்க வேண்டாம்... அமைச்சர்களுக்கு ஜெ. புது உத்தரவு
சென்னை: தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் வரும்போது குனிந்து நின்று வரவேற்பது... முதல்வர் சென்ற உடன் சில நிமிடங்களில் வெளியேறி விடுவது என வாடிக்கையாக வைத்திருந்த தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா புது உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர்கள் இனிமேல் முதல்வரை வரவேற்கவோ,வழியனுப்பவோ வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்த உத்தரவில் முக்கியமாக குறிப்பிட்டுள்ளாராம் முதல்வர் ஜெயலலிதா.
தமிழக அமைச்சர்கள் தலைமைச் செயலகத்திற்கு வந்த உடன் பணிகளை கவனிக்க வேண்டும் என்றும் தொகுதிவாசிகள், கட்சியினர் அனைவரும் தலைமைச் செயலகத்திலேயே அமைச்சரை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வருக்கு வரவேற்பு
முதல்வர் ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து சட்டசபைக்கு கிளம்பி விட்டார் என்று தெரியவந்தாலே அமைச்சர்கள் அனைவரும் தலைமைச் செயலக வாசலில் வரிசையாக நின்று கொள்வார்கள். அதேபோல முதல்வர் கிளம்பும் போதும் வழியனுப்ப வரிசையில் நிற்பார்கள்.

புது உத்தரவு
இனிமேல் அமைச்சர்கள் அப்படி நிற்கவேண்டிய அவசியம் இருக்காது. இதற்கான புது உத்தரவை பிறப்பித்துள்ளாராம் முதல்வர் ஜெயலலிதா. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இனி தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கட்டாயம் இருக்க வேண்டுமாம்.

லஞ்ச் உடன் வரவும்
தலைமைச் செயலகத்தில் இருந்து பைல்களை உடனுக்குடன் பார்த்து அனுப்பவேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் லஞ்ச் உடன் வந்து பணியை சுறுசுறுப்பாக பார்க்கிறார்களாம் அமைச்சர்கள்.

கோட்டையில் இருக்கணும்
கடந்த 29ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் பிற கட்சியினர் இணையும் விழா நடைபெற்ற போது வந்த அமைச்சர்கள் சில நிமிடங்களிலேயே திருப்பி அனுப்பப்பட்டார்களாம். அதனால்தான் இணைப்பு விழா புகைப்படங்களில் கூட அமைச்சர்கள் இடம்பெறவில்லை.

தொகுதிவாசிகளுடன் சந்திப்பு
முதல்வர் வீட்டுக்கு கிளம்பிய உடன் அமைச்சர்களும் வீட்டிற்கு கிளம்பிவிடுவார்கள். புது உத்தரவு மூலம் இனி அமைச்சர்கள் மாலை 4 மணிவரை தலைமைச் செயலகத்தில் இருப்பதால் தொகுதிவாசிகள் நேரடியாக வந்து அமைச்சர்களை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications