234 தொகுதிகளிலும் இரட்டை இலையை களமிறக்க ஜெ. திட்டம்: பீதியில் ஜி.கே.வாசன்
சென்னை: சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக்காக அதிமுக உடன் தமாகா ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், 234 தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக வெளியாகி வரும் தகவல் தமாகாவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரசில் இருந்து பிரிந்த தமாகா இன்னும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. அதிமுகவா அல்லது மக்கள் நலக்கூட்டணியா என்ற குழப்பம் அக்கட்சியில் நிலவுகிறது. இப்படி கூட்டணி அறிவிப்பு தாமதமாவதாலும், சைக்கிள் சின்னம் மறுக்கப்படுவதாலும் தமாகா தொண்டர்கள் விரக்தியடைந்துள்ளனர். யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்ய ஜி.கே.வாசன் செய்த காலதாமதமே இத்தகைய நிலை ஏற்படக்காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 50 நாட்களே உள்ளன. வேட்பு மனுதாக்கல் ஏப்ரல் 22 தொடங்கி, 29ம் தேதியுடன் முடிகிறது. எனவே கூட்டணி, தொகுதிப்பங்கீடுகளை இம்மாதம் இறுதிக்குள் முடித்து விட அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றன.
திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. எத்தனை தொகுதி என்பதில் இரு கட்சிகளிடையே இழுபறி நீடிக்கிறது.
மக்கள் நலக் கூட்டணியும், தேமுதிகவும் இணைந்து புதிய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளன. கூட்டணிக்கான பெயரை முடிவு செய்து அறிவிப்பதிலேயே சிக்கல் தொடங்கிவிட்டது.
ஆளுங்கட்சியான அதிமுகவுடன் ஏற்கெனவே சமக உள்பட 9 கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. தமாகா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் அதிமுக அழைப்புக்காக காத்திருக்கின்றன.
கட்சி தொடங்கியது முதல் அதிமுக அரசு மீதான விமர்சனத்தை தவிர்த்து வரும் தமாகா தலைவர் வாசன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிமுக 10 தொகுதிகள் வரை மட்டுமே தர முடியும் என்பதில் உறுதியாக இருந்தது.
இதனால் அதிருப்தியில் இருக்கும் வாசனை இழுக்க மக்கள் நலக் கூட்டணி முயற்சித்து வருகிறது. இதற்காக வாசனுடன் விஜயகாந்த் தொடர்ந்து பேசி வருவதாகக் கூறப்படுகிறது. மக்கள் நலக்கூட்டணி தலைவர்களும் வாசனுடன் பேசி வருகின்றனர். ஆனால் வெற்றிக்கூட்டணியில் மட்டுமே தமாகா இணையும் என்று ஆரம்பம் முதலே கூறி வருகிறார் ஜி. கே.வாசன்.

அதிமுக கூட்டணி
கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், அதிமுக தனித்து போட்டியிட்டு, 37 தொகுதிகளில் வென்றது. அதேபோல், சட்டசபை தேர்தலில் 234 களம் இறங்க முடிவு செய்து கடந்த 2015ம் ஆண்டே சமூக வலைத்தளங்களில் #மிசன் 234 என்ற ஹேஸ்டேக் போட்டு பிரச்சாரம் செய்தது.

வெள்ளத்தால் மாறிய முடிவு
கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட மழை வெள்ளம் ஜெயலலிதாவை யோசிக்க வைத்தது. எனவே சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று பொதுக்குழுவில் அறிவித்தார். அதோடு 234 தொகுதிகளுக்கும் விருப்பமனு வாங்க உத்தரவிட்டார் ஜெயலலிதா.

எதிர் கட்சிகளின் வியூகம்
திமுக உடன் தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து பலமான கூட்டணி அமைந்தால், தனித்து போட்டியிட முடியாது என்பதை உணர்ந்த அதிமுக தனித்து போட்டி என்று அறிவிக்கவில்லை. சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, போட்டியிட முடிவு செய்தது.

பிரிந்த எதிர்கட்சிகள்
திமுக அணியில் காங்கிரஸ், இந்திய முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே இணைந்துள்ளன. மதிமுக, விசிக, இடதுசாரிகள், தேமுதிக என தனி அணி உருவாகியுள்ளது. பாஜக தனியாக போட்டியிடுகிறது.

அதிமுக அணி கட்சிகள்
இந்திய குடியரசுக் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ் மாநில முஸ்லிம் லீக் சமத்துவ மக்கள் கழகம், சமத்துவ மக்கள் கட்சி, ஆகிய கட்சிகள் அதிமுக உடன் கூட்டணியில் இணைந்துள்ளது. தமிமூன் அன்சாரியின் மனித நேய ஜனநாயகக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமாகாவின் விருப்பம்
அதிமுக கூட்டணியில் இணைய தமாகா முடிவு செய்தது. தாங்கள் விரும்பும் தொகுதிகள் பட்டியலையும், அதிமுகவிற்கு அனுப்பியது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை, சுமுகமாக நடந்து வருவதாகவும், தகவல் வெளியானது. 25ம் தேதி ஜெயலலிதாவை ஜி.கே.வாசன் சந்திப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இதுவரை எந்த அழைப்பும் வாசனின் வாசலை எட்டவில்லை.

இரட்டை இலை சின்னம்
திமுக அணியில் தேமுதிக இணையும் என எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணியுடன், தேமுதிக கை கோர்த்துள்ளது அதிமுகவிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள, சிறிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதியை ஒதுக்கி, அவர்களை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க ஜெயலலிதா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

200 தொகுதிகளில் போட்டி
அதிமுக 200 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதிகளை பிரித்து தரவும் முடிவு செய்துள்ள ஜெயலலிதா இதன்மூலம் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளாராம். இதன் காரணமாகவே, அதிகாரப்பூர்வமாக கூட்டணி பேச்சு நடத்த, தமாகா இன்னமும் அழைக்கப்படவில்லையாம்.

சைக்கிள் கிடைக்காதே
அதிமுகவிடம் இருந்து தமாகா தரப்பிற்கு இதுவரை சாதகமான அழைப்பு எதுவும் வரவில்லை. சைக்கிள் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் யாருடன் கூட்டணி அமைத்து எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்ற குழப்பமும் வாசனுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனாலும் அதிமுகவின் அழைப்புக்காக, இன்னும் சில நாட்கள் காத்திருக்க முடிவு செய்திருக்கிறாராம்.

நேர்காணல் முடிஞ்சிருச்சே
தமாகாவில் போட்டியிட 4800 பேர்வரை விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களிடம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் பட்டியலும் தயாராக உள்ளது.
தங்கள் கட்சியின் அங்கீகாரத்திற்கும், அதிமுகவில் குறைந்த பட்சம், 15 தொகுதிகள் கிடைத்தால் கூடப் பரவாயில்லை என்ற நிலைக்கு வாசன் தள்ளப்பட்டுள்ளார். ஆனால் சின்னம்தான் வாசனை யோசிக்க வைக்கிறதாம். சட்டசபைத் தேர்தலில் வாசன் கரையேறுவாரா பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications