புதிய வசதிகளை அறிவித்த தமிழக முதல்வருக்கு துப்பாக்கி சுடும் வீரர், வீரங்கனைகள் நன்றி
சென்னை: துப்பாக்கி சுடும் போட்டிகளுக்காக புதிய பயிற்சித் தளங்களை அமைக்க உத்தரவிட்டதற்காக, வீரர், வீராங்கனைகள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இதுகுறித்து கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றிடும் வகையில், துப்பாக்கி சுடும் பயிற்சியைப் பெறுவதற்கான கூடுதல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக 28.8.2014 அன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 18 கோடி ரூபாய் செலவில் 10 மீட்டர் சுடுதளத்தில் 90 தடங்கள், 25 மீட்டர் சுடுதளத்தில் 60 தடங்கள், 50 மீட்டர் சுடுதளத்தில் 90 தடங்கள் என 240 தடங்கள்; இறுதிப் போட்டிக்காக 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் சுடுதளங்கள் ஒவ்வொன்றிலும் 10 தடங்கள்; சுடுதளத்திற்கான கட்டடங்கள்;
16 கோடி ரூபாய் செலவில் மின்னணு வசதிகளுடன் கூடிய ஸ்கோர் போர்டு உட்பட உலகத்தரம் வாய்ந்த நவீன துப்பாக்கி சுடுதல் போட்டிகளுக்குத் தேவையான உபகரணங்கள்; 2 கோடி ரூபாய் செலவில் டிராப் அன்ட் ஸ்கீட் தளத்திற்கான உபகரணங்கள் வாங்குதல்; கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகங்களில், தலா 2 கோடி ரூபாய் வீதம் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒவ்வொரு வளாகத்திலும் மின்னணு வசதிகளுடன் கூடிய 15 தடங்கள் கொண்ட துப்பாக்கி சுடும் தளங்கள்; என மொத்தம் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியைப் பெறுவதற்கான கூடுதல் வசதிகளை ஏற்படுத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
துப்பாக்கி சுடும் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்கள் வென்றிடவும், புதிய வீரர்களை உருவாக்கவும், தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திடவும் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியைப் பெறுவதற்கான புதிய தடங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்திட உத்தரவிட்டமைக்காக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு துப்பாக்கி சுடுவோர் சங்கத்தின் செயலாளர் ஆர்.ரவி கிருஷ்ணன், கோயம்புத்தூர் துப்பாக்கி சுடுவோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, மதுரை துப்பாக்கி சுடுவோர் சங்கத்தின் செயலாளர் எஸ்.வி.எஸ்.வேல்சங்கர்;
துப்பாக்கி சுடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளான, அசிலா கில்ஜி, வர்ஷா, சந்தியா, அசியா கில்ஜி, மிதிலேஷ் பாபு, அஜய் நிதிஷ், சர்வேஷ் ஸ்வரூப் சங்கர், ஆதேஷ் கே.செட்டி, வெங்கட்ராம், ஸ்ரீநிதி அபிராமி ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்து முதல்வருடன் ஜெயலலிதாவுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அப்போது, ஜெயலலிதா, எதிர்காலத்தில் நீங்கள் எந்த போட்டிகளில் பங்கேற்றாலும் மாநில அரசு உதவும் என்று உறுதி கூறுகிறேன். எனவே நீங்கள் உங்கள் விளையாட்டு பயணத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மேலும், மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.இந்த நிகழ்ச்சியின்போது தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், (ஓய்வு), உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, காவல் துறை தலைமை இயக்குநர் ராமானுஜம், ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications