நிவாரண பொருட்களை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஒப்படைக்கலாம்: மக்களுக்கு ஜெ. கோரிக்கை
சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் நிவாரண பொருட்களை வழங்கலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு உணவு, குடிநீர் என நிவாரணங்கள் வழங்கி வருகிறது. இந்திய கப்பற்படையினைச் சேர்ந்த 3 கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை கொண்டு வந்துள்ளன. அவை அனைத்தும் பெறப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், பல தொண்டு நிறுவனங்களும், தனியார் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி உள்ளனர். பல தன்னார்வ அமைப்புகள் நிவாரணப் பொருட்கள் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன. அவ்வாறு நிவாரணப் பொருட்களை வழங்க விரும்புவோர், ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள மையத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பல தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் வெள்ள நிவாரணத்துக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அவ்வாறு நிதி உதவி செய்ய விரும்புவோர் (Chief Minister's Public Relief Fund) என்ற பேரில் காசோலை/வரைவோலை (டி.டி.) மூலம் நிதித்துறை இணைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது நிதித் துறை இணைச் செயலாளரை நேரில் சந்தித்தும் வழங்கலாம்.
முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு தொகையை அனுப்ப விரும்புகிறவர்கள், காசோலை அல்லது வரைவுக் காசோலை (செக் அல்லது டி.டி.) மூலம் அனுப்பவேண்டும். அவற்றை, இணைச் செயலாளர் மற்றும் கருவூல அதிகாரி. முதலமைச்சர் பொது நிவாரண நிதி, நிவாரண (சி.எம்.பி.ஆர்.எப்.) நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை-9 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
இ.சி.எஸ். முறையில் நேரடியாகவும் சி.எம்.பி.ஆர்.எப். என்ற முதலமைச்சர் பொதுநிவாரண நிதித்துறையின் வங்கிக் கணக்குக்கும் (சேமிப்புக் கணக்கு) அனுப்பி வைக்கலாம். இந்தத் துறையின் வங்கிக் கணக்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமைச்செயலகக் கிளையில் உள்ளது. கணக்கு எண், 117201000000070, சி.எம்.பி.ஆர்.எப். பான் GC0038F.
இந்த நிவாரணத்துக்கு அனுப்பப்படும் தொகைக்கு 100 சதவீத வருமான வரிவிலக்கு உண்டு. இ.சி.எஸ். முறையில் பணம் அனுப்புவோர், தங்களின் பெயர், அனுப்பும் தொகை, பணம் எடுத்த வங்கி மற்றும் கிளையின் பெயர், பணம் எடுத்த நாள், சரிபார்க்கும் எண், தொடர்புகொள்ளும் முகவரி, இமெயில் முகவரி ஆகிய தகவல்களை சேர்த்து அனுப்ப வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications