கொடநாடு ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ஜெயலலிதா
கோவை: கொடநாட்டில் தனது எஸ்டேட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜெய பக்த ஆஞ்சநேயர் ஆலய கும்பாபிஷேக விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார். அவருடன் தோழி சசிகலாவும் பங்கேற்றார். இந்த விழாவில் பங்கேற்றுவிட்டு சசிகலாவுடன் ஜெயலலிதா இன்று சென்னை திரும்பினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 24ம் தேதி சென்னையிலிருந்து கொடநாடு எஸ்டேட்டிற்கு சென்றார். அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை கவனித்து வந்த முதல்வர், குன்னூரில் நடைபெற்ற விலையில்லாப் பொருட்கள் விநியோகத்தை தொடங்கி வைத்ததோடு, கோத்தகிரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த தின நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இந் நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் புதிதாக ஜெய பக்த ஆஞ்சநேயர் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று காலை 7.35 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடந்தது.

இதில் சசிகலா, கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரியும் அலுவலர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் கொடநாட்டிலிருந்து ஜெயலலிதா இன்று ஜெயலலிதா சென்னை திரும்பினார். அவர் கடந்த 30 நாட்களாக அங்கு தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொடநாட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்த ஜெயலலிதா பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
முதல்வர் சென்னை திரும்புவதையொட்டி கொடநாடு எஸ்டேட்டிலிருந்து கர்சன் எஸ்டேட் ஹெலிகாப்டர் தளம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சென்னையிலும் ஜெயலலிதா வருகையையொட்டி வழி நெடுகிலும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications