"முதல்வர் ஜெயலலிதா".. போயஸ் கார்டன் முதல் போயஸ் கார்டன் வரை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் முதல்வராக 5வது முறையாக இன்று பதவியேற்றார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

காலை அவர் தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து கிளம்பியது முதல் முதல் பதவியேற்பு விழா முடிந்து மீண்டும் வீடு திரும்பும் வரை நடைபெற்ற நிகழ்வுகள் ஒரு தொகுப்பு:
- நேற்று முதலே சென்னையில் அதிமுக தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கான அளவில் குவிந்திருந்தனர்.
- ஜெயலலிதாவிற்கு பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
- பதவியேற்பு விழாவினையொட்டி சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
- ராகுகாலம் முடிந்து காலை 10.30 மணியளவில் விழாவிற்கு புறப்பட்டார் ஜெயலலிதா.
- மெரினா கடற்கரை முழுவதும் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு குவிந்திருந்தனர் அதிமுக தொண்டர்கள்.
- சாலையின் இருமருங்கிலும் குவிந்திருந்த அதிமுக தொண்டர்கள் மலர் தூவி ஜெயலலிதாவினை வரவேற்றனர்.
- ஜெயமங்கள கணபதியை வழிப்பட்டு தன்னுடைய பயணத்தை துவங்கினார் ஜெயலலிதா.
- அவரது வருகையை முன்னிட்டு கடற்கரை காந்தி சிலை முதல் தலைமைச் செயலகம் வரையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
- கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த பெரிய, பெரிய திரைகளில் பதவியேற்பு விழா ஒளிப்பரப்பப் பட்டது.
- எழிலகத்தின் மாடியில் இருந்து ராட்சத கிரேன்களில் பொருத்தப்பட்டிருந்த காமிராக்கள் மூலமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் முதல், சென்னை பல்கலைக்கழகம் வரையில் பிரம்மாண்ட வரவேற்பு பேனர்கள் குவிக்கப்பட்டிருந்தன.
- போயஸ் கார்டனிலிருந்து வழிநெடுக குவிந்திருந்த அதிமுக தொண்டர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- விழா நடைபெற்ற சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு வந்தடைந்த ஜெயலலிதாவிற்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
- காலை 11 மணியளவில் துவங்கிய பதவியேற்பு விழாவில் ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
- பச்சைப் புடவையில் வந்திருந்த ஜெயலலிதா, கையில் பச்சைக் கல் மோதிரம் அணிந்து, பச்சை நிறப் பேனாவினால் பதவி உத்தரவில் கையெழுத்திட்டார்.
- அதன்பின்னர் 28 அமைச்சர்களும் 14, 14 பேராக இரண்டு குழுக்களாக ஒட்டு மொத்தமாக பதவியேற்றனர்.
- இவ்விழாவில் திரையுலகப் பிரபலங்களான நடிகர் ரஜினி, சரத்குமார், குண்டுக்கல்யாணம், பாத்திமா பாபு, மனோபாலா, வெண்ணிற ஆடை நிர்மலா, நிர்மலா பெரிய சாமி, மதுரை ஆதீனம், இசையமைப்பாளர் இளையராஜா, கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பிற கட்சிகள் சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, இல.கணேசன் ஆகோயோரும் கலந்து கொண்டனர்.
- ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும் தன்னுடைய குடும்பத்தினருடன் முதல் வரிசையில் அமைந்திருந்தனர்.
- பதவியேற்பு விழா முடிவுற்றதும் ஜெயலலிதாவின் காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டு, தேசியக் கொடி பொருத்தப்பட்டது.
- தேசியக் கொடி பொருத்தப்பட்ட காரில் ஏறி தனது போயஸ் தோட்ட இல்லத்தை சென்றடைந்தார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications