அதிமுக பிரசார வாகனங்கள் போயஸ் கார்டன் வந்தன
சென்னை: சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா இன்று பிரச்சாரத்தை சென்னையில் தொடங்குகிறார்.
தமிழக சட்டசபைக்கு வரும் மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையிலான குழுவினர் இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர்களை அறிவித்த கையோடு இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்வர் ஜெயலலிதா. சென்னை தீவுத் திடலில் தனது முதல் பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகிறார். அப்போது சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்து வாக்கு சேகரிப்பார்.
சென்னையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையையும் ஜெயலலிதா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதிமுகவினர் மத்தியில் உற்சாகம் காணப்படுகிறது.
ஜெயலலிதாவின் பேச்சை நேரடியாக ஒளிபரப்ப செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வாகனங்கள் நேற்று போயஸ் கார்டன் இல்லத்தில் அணிவகுத்து நின்றன.

வாகனத்தை சுற்றிலும் அதிமுக அரசின் 5 ஆண்டு சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் இன்று மாலை சென்னை தீவுத் திடலில் நடைபெறும் கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்காக இந்த வாகனம் ஒவ்வொரு ஊரிலும் தயார் நிலையில் வைக்கப்படும் என கூறப்படுகிறது..












Click it and Unblock the Notifications