வீடியோவில் உள்ளது ஜெயலலிதாவா ரோபோவா?... கேள்வி எழுப்பும் கீதா!
Recommended Video
சென்னை : அப்பலோ மருத்துவமனையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் இருப்பது ஜெயலலிதா தானா அல்லது ரோபோவா என்ற கேள்வி எழுப்பியுள்ளார் அவருடைய தோழி கீதா.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ என்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று 20 விநாடிகள் வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா குறித்து வெளியாகும் தகவல்களை கேட்டு மிகுந்த மனவேதனையுடனே இந்த வீடியோவை வெளியிடுவதாக வெற்றிவேல் இதற்கு காரணமும் சொன்னார்.
ஆனால் இந்த வீடியோ பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன, நீதிமன்றத்தில் வழக்கு பொதுவெளியில் கேள்வி என ஓராண்டில் எழுந்த சர்ச்சைகள் எண்ணில் அடங்காதவை. இந்நிலையில் அவர் மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
முன்கூட்டியே வெளியிடாதது ஏன்?
இந்த வீடியோ காட்சிகள் குறித்து ஜெயலலிதாவின் தோழி கீதா பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து நாங்கள் டிசம்பர் 20ம் தேதி வழக்கு போட்டோம், அப்போதே வீடியோவை வெளியிட்டிருக்கலாமே. அப்போதும் அவர் உயிருடன் இல்லையே, அன்று வெளியிடாமல் ஒராண்டு காத்திருந்தது ஏன்?
ரோபோவை வைத்து வீடியோ தயார்
ஒரு வீடியோவை வெளிநாட்டுக்கு அனுப்பி மார்பிங் செய்து ஜெயலலிதா போலவே ஒரு பொம்மையை தயார் செய்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். டென்காலஜியை நன்றாக பயன்படுத்தி இந்த வீடியோ காட்சியை தயார் செய்து வெளியிட்டுள்ளனர். ஜெயலலிதாவின் கால்கள் பொம்மை கால்கள் போலத் தான் இருக்கிறது, அசையாமல் அப்படியே இருக்கிறது.
கால்கள் அசையவில்லை
அவருடைய கைகள் ஒரே நிலையில் சென்று வருகிறது முகத்தில் எந்த பாவனையும் இல்லை. ஜெயலலிதா இறந்த பின்னர் உடனேயே வீடியோவை வெளியிட வேண்டியது தானே. இந்த வீடியோக்களைப் பார்த்து பாமர மக்கள் ஏமாறலாம் ஆனால் படித்தவர்கள் யாரையும் முட்டாளாக்க முடியாது. இது உண்மையான வீடியோ கிடையாது, அரசியலுக்காக தினகரன் இந்த ஸ்டண்ட் நடத்தியுள்ளார்.
நிரூபிப்பேன்
ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். அப்படி இருக்கும் போது இந்த வீடியோ நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும், ஜெயலலிதாவை கொன்றது சசிகலா குடும்பம் தான் என்பதை நிரூபிப்பேன் என்றும் கீதா தெரிவித்துள்ளார்.