அதிமுக அலுவலகத்தில் நாளை உதயமாகிறது ஜெ. சிலை!
ஜெ.வின் 70வது பிறந்தநாள் கொண்டாட்டம்... அதிமுக அலுவலகத்தில் நாளை வெண்கல சிலை திறப்பு!
சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை திறந்து வைக்கப்பட உள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. ஜெயலலிதா உயிரிழந்த பின்னர் கொண்டாடப்படும் இரண்டாவது பிறந்தநாள் இது. கடந்த ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்தநாளின் போது சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்க, ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தலைமையிலான அதிமுகவை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கினார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவருடைய அண்ணன் மகள் தீபா புதிய கட்சியைத் தொடங்கினார். ஓராண்டிற்குள் அதிமுகவில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள். இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இருந்த ஓ.பன்னீர்செல்வமும்,எடப்பாடி பழனிசாமியும் மொத்த ஆட்டத்தையும் கலைத்து விட்டு இவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கட்சியையும் ஆட்சியையும் கொண்டு வந்துவிட்டனர்.
இந்நிலையில் நாளை ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை கொண்டாட சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் வெண்கல சிலை நாளை திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10.50 மணியளவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஜெயலலிதாவின் சிலையை திறந்து வைக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது புரட்சித் தலைவி அம்மா என்ற நாளேடும் நாளை வெளியிடப்படுகிறது. ஜெயலலிதா சட்டசபை தேர்தலில் அறிவித்த திட்டமான வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டம் மாலை 5.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications