டீசல் விலை உயர்வு ஏழை, எளிய மக்களை வாட்டும் செயல்: ஜெயலலிதா கண்டனம்

பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 3.87 குறைக்கப்பட்டது. கடந்த 5 மாதங்களில் முதல் முறையாகவும், 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கும் குறைக்கப் பட்டுள்ளது. அதேநேரத்தில், டீசல் விலை லிட்டருக்கு 64 காசுகளும், மானியமற்ற காஸ் சிலிண்டரின் விலை 68.05 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ‘விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு' ‘கட்டுக்கடங்காத பணவீக்கம்', ‘பொருளாதார மந்தநிலை', என பல்வேறு பிரச்சனைகளை கடந்த சில மாதங்களாக இந்திய மக்கள் எதிர்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், இவற்றிற்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்காமல், மாதாமாதம் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே வருவது போல், இந்த மாதமும் இன்று முதல் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு உயர்த்தியிருப்பது ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல். இதற்கு எனது கடும் கண்டனத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்ற மாதம் பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியபோது, சர்வதேச அளவிலான விலை உயர்வு பற்றியும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததையும் சுட்டிக்காட்டின.
பணவீக்கத்தையும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்திக் கொண்டே செல்வது நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரவும் வழிவகுக்கும் என்றும் தெரிவித்து, அந்த விலை உயர்விற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து இருந்தேன்.
ஆனால், தற்போது சர்வதேச அளவிலான கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதோடு மட்டுமல்லாமல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது. இந்தச் சூழ்நிலையிலும், வழக்கம் போல டீசல் விலையை உயர்த்தியிருப்பது நியாயமற்ற செயல்.
இந்த விலை உயர்வு, பணவீக்கம் மேலும் உயரவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் அதிகரிக்கவும் வழிவகுப்பதோடு, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயணிக்கும் வாகனக் கட்டணங்களையும் ஏறுமுகத்தில் செல்ல வழிவகுக்கும்.
எனவே, இந்திய நாட்டின் தற்போதைய சூழ்நிலையையும், சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதையும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதையும் கருத்தில் கொண்டு, தற்போது உயர்த்தப்பட்டுள்ள டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவதோடு, எண்ணெய் நிறுவனங்களுக்கு மாதா மாதம் டீசல் விலையை உயர்த்த வழங்கியுள்ள அதிகாரத்தையும் திரும்பப் பெறவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications