எளிமையும் இனிமையும் கொண்டவர் வியட்நாம் வீடு சுந்தரம்: முதல்வர் ஜெயலலிதா புகழாரம்
சென்னை: பழம்பெரும் திரைப்பட வியட்நாம் வீடு சுந்தரத்தின் மறைவு தமிழ் திரைப்படத்துறையினருக்கு பேரிழப்பாகும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். வியட்நாம் வீடு சுந்தரத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம், உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டில் காலமானார். இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
திரையுலகம் கண்ட மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர் வியட்நாம் வீடு சுந்தரம். 1970ம் ஆண்டு வியட்நாம் வீடு என்ற மாபெரும் வெற்றிப்படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக திரையுலகில் அறிமுகமானார்.
இவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த நான் ஏன் பிறந்தேன், நாளை நமதே ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய இவர் குடும்பப் பாங்கான திரைப்படங்களை இயக்குவதில் வல்லவர்.
வியட்நாம் வீடு படத்திற்காக தமிழக அரசின் விருது மற்றும் அண்ணா விருதுகளை பெற்றுள்ளார். பழகுவதற்கு எளிமையானவர் இனிமையானவர்.
அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்று ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.