இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்- அடுத்த முதல்வர் தேர்வு!
சென்னை: முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தின் புதிய முதல்வர் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோய்விட்டது. தற்போதைய சூழலில் 10 ஆண்டுகளுக்கு ஜெயலலிதாவால் மீண்டும் எம்.எல்.ஏவாகவோ அல்லது முதல்வராகவோ முடியாது. ஜெயலலிதா வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே தவறு என்றும் ஜெயலலிதா நிரபராதிதான் என்றும் ஒரு தீர்ப்பு வந்தால் மட்டுமே அவரால் எம்.எல்.ஏ.வாகி முதல்வராக முடியும்.

அதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவுதான். இதனால் தமிழகத்தின் புதிய முதல்வர் யார் என்பதில் பரபரப்பு நீடிக்கிறது. இதற்காக பெங்களூரில் இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னை திரும்பியுள்ளனர். இன்று மாலை 3 மணியளவில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமை நிலையத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதிய அமைச்சரவை பட்டியலும் ஆளுநருக்கு பரிந்துரைக்கப்படும் அதன் பின்னர் புதிய முதல்வர் மற்றும் புதிய அமைச்சரவை பதவியேற்கும்.
தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இல்லை என்றால் தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் அல்லது அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரில் யாராவது தேர்வாகலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications