திருவண்ணாமலையில் முக்கூர் சுப்ரமணியத்தை 'தூசி' தட்டிய மோகன்... பரபர பின்னணி
சென்னை: அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் கட்சியில் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று அதிரடியாக மாற்றியுள்ளார். திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்ரமணியன் நீக்கப்பட்டு செய்யாறு எம்எல்ஏ தூசி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக, பாமகவினருடன் இணைந்து கொண்டு முக்கூர் சுப்ரமணியன் செய்த உள்ளடி வேலையே இந்த மாற்றத்திற்கான பின்னணியில் உள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்ரமணியன் மீது மூத்த கட்சி நிர்வாகிகள் கடுமையான அதிருப்தியில் இருந்தனர். இதனால், சட்டசபைத் தேர்தலில் அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால், அவரது தீவிர ஆதரவாளரான சேவூர் ராமச் சந்திரன் ஆரணி தொகுதியில் வெற்றிபெற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரானார்.

இதையடுத்து, முக்கூர் சுப்ரமணியத்திடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவியும் எந்த நேரத்திலும் பறிக்கப் பட்டு அமைச்சர் சேவூர் ராமச் சந்திரனிடம் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. தற்போது, செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி மோகன் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூசி மோகன் கடந்த 2011ம் ஆண்டு சில மாதங்கள் மாவட்டச் செயலாளராக இருந்தார். அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவி, முக்கூர் சுப்ரமணியனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.
முக்கூர் சுப்ரமணியனிடம் விசுவாசமாக இருந்ததால், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெம்பாக்கம் ஒன்றியத் தலைவர் பதவி மோகனின் மனைவிக்கு தரப்பட்டது. செய்யாறு தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலில் மோகனின் பெயரை பரிந்துரை செய்ததே முக்கூர் சுப்ரமணியன்தான்.
அதே நேரத்தில் சட்டசபை தேர்தலில் செய்யாறு தொகுதியில் தலைமையால் வேட்பாளராக நிறுத்தப்பட்ட தூசி மோகனை வீழ்த்த திமுக, பாமகவுடன் முக்கூர் சுப்ரமணியன் ரகசியமாக கூட்டு வைத்து செயல்பட்டாராம் அதையும் மீறி மோகன் வெற்றிபெற்றுள்ளார்.
தன்னை கவிழ்க்க முக்கூர் சுப்ரமணியன் செய்த உள்ளடி வேலைகள் முழுவதையும் கட்சித் தலைமைக்கு ஆதாரங்களுடன் மோகன் தரப்பினர் புகாராக அனுப்பினர். அதன் அடிப்படையிலே அவர் நீக்கப்பட்டாராம்.
அதே நேரத்தில் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு வன்னியரை நியமிக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் தூசி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் முக்கூர் சுப்ரமணியின் ஆதரவாளர்தான் என ஒருதரப்பினர் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் புகாருக்கு ஆளான முக்கூர் சுப்ரமணியனை 'தூசி' தட்டி விட்டு மோகனை மாவட்ட செயலாளராக ஜெயலலிதா நியமித்துள்ளார் என்றும் திருவண்ணாமலை அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications