ஆங்கில பத்திரிகையில் அவதூறு பேட்டி: சுப்பிரமணியசாமி மீது ஜெயலலிதா சார்பில் மேலும் ஒரு வழக்கு
சென்னை: சுப்பிரமணியசாமி மீது ஜெயலலிதா மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு சுப்பிரமணியசாமி அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறி, ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இன்று சுப்பிரமணியசாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு, ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டிற்கு சுப்பிரமணியசாமி அளித்த பேட்டியில் ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்ததற்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில் "முதல்வரின் நற்பெயர் மற்றும் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சுப்பிரமணியசுவாமி பேட்டியளித்துள்ளார். தமிழக மீனவர் பிரச்சினை குறித்தும் அவதூறு பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியின் உண்மை தன்மையை ஆராயாமல் செய்தி வெளியிட்டுள்ளது, டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேடு.
இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது, உள்நோக்கம் கொண்டது. இச்செய்தியை வெளியிட்டதற்காக பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளரையும் தண்டிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications