ஜெ., நலம்பெற வீரபாண்டி கோவிலில் தங்கத்தமிழ் செல்வன் அலகு குத்தி வழிபாடு - 30000 பேர் பால்குடம்
தேனி: முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் 30000 பேர் பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர். ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ தங்கத்தமிழ் செல்வன் அலகு குத்தி வந்து வழிபட்டார்.
உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கோயில்களில் வழிபாடுகள் செய்து வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கானோர் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். சிலர் யாகங்களும், அன்னதானம் கொடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
ஆயுஸ் ஹோகம்
திருவள்ளூர் கரீம்பேடு கிராமத்திலுள்ள அருள்மிகு நாதேஸ்வரர் திருக்கோவிலில் ராகு கேது யாகம் நடைபெற்றது. பாலாபுரம் கிராமத்திலுள்ள அருள்மிகு திரெளபதி அம்மன் திருக்கோவிலில் ஆயுஸ் ஹோமம் நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து, அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நந்தம்பாக்கம் அருள்மிகு கோதண்டராம சுவாமி கோயிலில் ஆயுஷ்ஹோமம், தன்வந்தரி ஹோமங்கள் நடத்தப்பட்டன.
வாராஹி வழிபாடு
தஞ்சை பெரிய கோயிலில், வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. திரளான கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் மகா கணபதி யாகம் நடைபெற்றது. ஏழை அந்தணர்களுக்கு கோ தானம் வழங்கப்பட்டது. குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குத்துவிளக்கு வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டம் சேவகன்பட்டி காளிஅம்மன் கோயிலில் அம்மன் சன்னதியில் 568 பெண்கள் குத்துவிளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பாலமுருகன் திருக்கோயிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. காலாப்பட்டு கிராமத்தில் உள்ள யோக சனீஸ்வரர் திருக்கோயிலில், சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது.
நெய்விளக்கு வழிபாடு
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள ஸ்ரீ செளமிய நாராயண பெருமாள் ஆலயத்தில், 1008 நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.சிவகங்கை மாவட்டம் தாயமங்களம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் யாகம் நடத்தி, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதேபோல், காரைக்குடி அருகேயுள்ள பூவாண்டிபட்டி ஸ்ரீதேசிகநாதர் ஆலயத்தில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பால்குடம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் புஷ்பவனம் மீனவர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயிலில், பால்குடம் எடுத்து பிரார்த்தனை செய்யப்பட்டது. இதேபோன்று கருப்பம்புலம் வீர கோதாண்டராமர் கோயில் மற்றும் பஞ்சநதிக்குளம் மாரியம்மன் கோயிலில்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீகற்பக விநாயகர் கோவிலுக்கு, நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாகச் சென்று, விநாயகருக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
தங்கத்தமிழ் செல்வன் வழிபாடு
தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ தங்கத் தமிழ் செல்வன் தலைமையில் 30000 பேர் பால்குடம் எடுத்து வழிபட்டனர். எம்.எல்.ஏ தங்கத்தமிழ் செல்வன் அலகு குத்தி வந்து அம்மனை வழிபட்டார்.












Click it and Unblock the Notifications