முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது- பொன்னையன்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக மூத்த தலைவரும் செய்தி தொடர்பாளருமான பொன்னையன் கூறினார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந் தேதி இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவர் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
அவ்வப்போது மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 13-வது நாளாக இன்றும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் 5வது அறிக்கையை இன்று மாலை வெளியிட்டது அப்பல்லோ மருத்துவமனை. அதில் முதல்வர் உடல்நிலை தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், வழக்கமான சிகிச்சைகள் தொடருவதாகவும், டாக்டர்கள் குழுவால் முதல்வர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இதற்கிடையே, ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக மூத்த தலைவரும் செய்தி தொடர்பாளருமான பொன்னையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். இது குறித்து பொன்னையன் கூறுகையில், ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஜெயலலிதா மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார். தமிழகத்துக்கு இடைக்கால முதல்வர் தேவை என்பது பொறுப்பற்ற பேச்சு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.