முதல்வர் ஜெயலலிதா விரைவில் கொடநாடு பயணம்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் கொடநாடு சென்று ஓய்வு எடுத்து விட்டு சில நாட்கள் அங்கு அலுவலக பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர்ந்து நடந்து முடிந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். அதிமுக நிர்வாகிகளும் உள்ளாட்சி தேர்தலுக்குத் தயாராகி வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, கடந்த மே 23ம் தேதி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது. இதையடுத்து, ஜூன் 16ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்கியது. 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை, ஜூலை 21ம் தேதி சட்டசபையில் க்கல் செய்யப்பட்டது.

இதன்பின், நிதிநிலை அறிக்கை மற்றும் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் என 36 நாட்கள் சட்டசபைக் கூட்டத் தொடர் நடந்தது. செப்டம்பர் 2ம் தேதியுடன் பேரவை நிகழ்ச்சிகள் முடிந்தன. சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா விரைவில் கொடநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ஓய்வு எடுத்தாலும் உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்வார் எனவும், சில வாரங்கள் தங்கியிருந்து அரசு அலுவல்களை கவனிப்பார் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காவிரி நதிநீத் பிரச்சினை ஒருபக்கம், சிறுவாணி அணைப் பிரச்சினை மறுபக்கம் என தமிழக விவசாயிகளின் ஜீவாதாரப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பினால் கர்நாடக மாநிலத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த பிரச்சினைக்கான தீர்வு குறித்து முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை வழங்கிவிட்டு அவர் கொடநாடு செல்வார் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications