கருணாநிதி பிறந்தநாளான இன்று மோடியுடன் ஜெயலலிதா சந்திப்பு
சென்னை: பிரதமர் நரேந்திரமோடியை டெல்லியில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான ஒத்துழைப்பை தருமாறு மத்திய அரசை அவர் கேட்டுக்கொள்ள உள்ளார். 2ஜி விவகாரங்கள் நிலுவையிலுள்ள நிலையில், கருணாநிதியின் பிறந்தநாள் தினத்தன்று இருதலைவர்களின் சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திரமோடிக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே நீண்ட காலமாக நல்ல நட்பு இருந்துவருகிறது. ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றபோது, மோடியும், அதேபோல மோடி குஜராத்தின் முதல்வராக பொறுப்பேற்றபோது ஜெயலலிதாவும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். ஆனால், பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்றதால், தமிழக முதல்வர் ஜெயலலிதா அந்த விழாவுக்கு செல்லவில்லை.
இந்நிலையில் இருதலைவர்களும் டெல்லியில் இன்று சந்தித்து பேசுகிறார்கள். இதற்காக இன்று காலை 11.30 மணிக்கு தனி விமானத்தில் ஜெயலலிதா டெல்லி செல்கிறார். அதிமுகவின் 37 எம்.பி.க்கள், 10 ராஜ்யசபா எம்.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் விமான நிலையத்திற்கு திரண்டு வந்து ஜெயலலிதாவுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்.
இதன்பிறகு கார் மூலம் தமிழ்நாடு இல்லத்திற்கு ஜெயலலிதா செல்கிறார். அங்கு தமிழக மூத்த அமைச்சர்கள், டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.கே.டி. ஜக்கையன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு கொடுக்கிறார்கள்.
பின்னர் மதியம் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கும்படி வேண்டுகோள்விடுத்து மனு கொடுக்கிறார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாவது பற்றியும் ஜெயலலிதா பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் ராஜ்யசபாவிவ் பாஜக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் பிரச்சினைகள் அடிப்படையில் இணைந்து செயல்படுவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
பின்னர் மாலையே ஜெயலலிதா சென்னை திரும்புகிறார். ஜூன் 3ம்தேதியான இன்று கருணாநிதிக்கு பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே தினத்தில் நரேந்திரமோடியும், ஜெயலலிதாவும் சந்தித்து பேசுவதால், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மீதான கவனம், இந்த சந்திப்பின்மீது திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 2ஜி போன்ற பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கருணாநிதிக்கு பிறந்தநாள் அன்று கலக்கத்தை ஏற்படுத்தவே ஜூன் 3ம்தேதி இந்த சந்திப்பு நிகழ்வதாகவும் கூறப்படுகிறது.