எம்.ஜி.ஆர். சமாதி அருகில் மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம்
ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது.
சென்னை: எம்.ஜி.ஆர். சமாதி அருகில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மத்திய அரசின் அனுமதி பெற்று விரைவில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி அமைந்துள்ள வளாகத்தில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தநிலையில் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் விரைவில் நினைவிடம் அமைக்க உள்ளதாக தெரிகிறது.

சமாதியைப் பொறுத்தவரை, தமிழக அரசின் செய்தித்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. இதை பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது. தற்போது, இந்த இடத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கடற்கரை ஒழுங்குமுறைச் சட்டப்படி கடற்கரை ஓரங்களில் எந்த கட்டுமானங்களையும் எழுப்பக் கூடாது. ஏற்கெனவே அனுமதி பெறப்பட்ட வளாகம் என்பதால் தமிழக அரசின் ஒப்புதலுடன் இதில் தற்போது அடக்கம் செய்யப்பட்டது. அதே நேரம், நினைவிடம் அமைக்க தமிழக அரசு மத்திய அரசின் உதவியை நாட வேண்டும். எனவே, மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்கான ஆவணங்களை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. மத்திய அரசிடம் இருந்து விலக்கு பெற்று விரைவில் நினைவிடம் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மெரினாவில் ஏற்கனவே மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆரின் சமாதிகள் உள்ளன.












Click it and Unblock the Notifications