செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: ஞானதேசிகன் அறிக்கையை அப்படியே வழிமொழிந்த ஜெயலலிதா!
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு இதுவரை பேசாமலேயே இருந்து வந்த முதல்வர் ஜெயலலிதா இன்று முதல் முறையாக அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உண்மைக்கு புறம்பாக எதிர்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன.முக்கிய காலகட்டத்தில் போது முதல்வர் உத்தரவிட்டு நீர் திறப்பது திமுக ஆட்சிகாலத்தில் இருந்து நடந்து வருகிறது. வரலாறு காணாத மழையும், பல ஏரிகளில் இருந்து நீர் திறப்பும் அடையாற்று வெள்ளத்திற்கு காரணம் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொதுகுழு, செயற்குழுக் கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி-ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்துக்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார்.
மீண்டும் ஜெயலலிதாவை முதல்வராக்குவது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன. இறுதியில், ஜெயலலிதா சிறப்புறையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தொண்டர்களால் உயர்ந்தேன்...
கடந்த நான்கரை ஆண்டுகளில் அ.தி.மு.க அரசு அளப்பரிய சாதனைகளை செய்துள்ளது.அண்ணா எம்.ஜி.ஆர் போல் நானும் கழக தொண்டர்களால் உயர்ந்தேன்.
நான் செய்த சாதனைகள்...
அரசின் சாதனைகள் அத்தனையும் என்னால் மட்டுமே சாத்தியமானது. காவிரி,முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை அ.தி.மு.க அரசே நிலைநாட்டியது.
பொய்ப் பிரச்சாரம்...
மழை வெள்ள பாதிப்பின் போது அனைத்து துறைகளும் துரிதமாக செயல்பட்டன. செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து உண்மைக்கு புறம்பாக எதிர்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன.
சென்னை வெள்ளத்திற்குக் காரணம்...
முக்கிய காலகட்டத்தில் போது முதல்வர் உத்தரவிட்டு நீர் திறப்பது தி.மு.க ஆட்சிகாலத்தில் இருந்து நடந்து வருகிறது. வரலாறு காணாத மழையும், பல ஏரிகளில் இருந்து நீர் திறப்பும் அடையாற்று வெள்ளத்திற்கு காரணமாகும்.
சட்டசபைத் தேர்தல்...
2014 லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்றது. இதே போல் 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். அதிமுக வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. சட்டசபை தேர்தல் தொடர்பாக சூழ்நிலைக் கேற்ப முடிவு செய்யப்படும்.
வெற்றி...வெற்றி...
இதுவரை அதிமுக 6 முறை ஆட்சி பொறுப்பில் இருந்துள்ளது. இனியும் இருக்கம். இனி அதிமுக.,விற்கு தோல்வி என்பதே இல்லை. எங்கும் வெற்றி. எதிலும் வெற்றி. எழுதி வைத்துக் கொள்ளுங்கள்' என்றார்.
பாராட்டு...
அதோடு வெள்ள பாதிப்பின் போது மக்களுக்கு உதவிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அவர் பாராட்டினார்.
செம்பரம்பாக்கம்...
இம்மாதம் 1ம் மற்றும் 2ம் தேதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி நீர் அதிகளவில் திறந்து விடப்பட்டது. இதனால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
மனித தவறே காரணம்...
வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் தங்கள் பல ஆண்டு சேமிப்புகளை இழந்தனர். மிகுந்த பொருட்சேதமும், உயிர்ச் சேதமும் ஏற்பட்ட இந்த வெள்ளத்திற்கு மனித தவறே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
விளக்கம்...
ஆனால், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து இதுவரை மௌனம் காத்து வந்த ஜெயலலிதா, தற்போது முதன்முறையாக அது குறித்து விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் சொன்னதையே முதல்வரும் திரும்பக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications