எம்.ஜி.ஆர் 28வது நினைவு தினம்: ஜெயலலிதா அஞ்சலி- அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க உறுதி மொழி
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் 28 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில், முதல்வர் ஜெயலலிதா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். வெள்ள பாதிப்பை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்ற ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த காரணத்தால் அவரைக் காண பல்லாயிரக்கணக்கானோர் மெரீனா கடற்கரைசாலையில் குவிந்தனர்.
எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட அனைவரும், 2016 சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர களப்பணியாற்றுவோம் என்று தெரிவித்தனர்.
அதிமுக வை உருவாக்கிய தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மையாதை செலுத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா,இன்று காலை 10 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி மொழியை வாசிக்க கூடியிருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதி மொழி எற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சோதனைகள் பல வென்று மீன்றும் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நல்லாசியோடு கழக நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்து நல்லாட்சி அமைந்திட முழு அர்ப்பணிப்போடு களப்பணியாற்றுவோம் என்று இந்நாளில் உளமாற உறுதி ஏற்கிறோம் என்று ஓ.பன்னீர் செல்வம் வாசிக்க அதனை அமைச்சர்களும், அதிமுகவினரும் உணர்ச்சி பொங்க திரும்ப கூறினர்.