தமிழகத்தை அரசாளும் ஜெயலலிதாவின் புகைப்படம்....
முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை நடுநாயகமாக வைத்துக்கொண்டு அமைச்சரவை கூட்டங்கள், துறை ரீதியான அலுவல் ஆய்வுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
சென்னை : தமிழக முதல்வர் அம்மாவின் ஆணைக்கிணங்க அவரது புகைப்படத்தின் முன்னிலையில் இப்போது அமைச்சரவை கூட்டங்கள், துறை ரீதியாக அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெறுகின்றன. ராமாயண இதிகாசத்தில் ராமரின் பாதுகை 14 ஆண்டுகாலம் அரசாண்டது. அதேபோல உடல்நலக்குறைவினால் அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது புகைப்படத்தின் முன்னிலையில் அரசு இயங்குகிறது.
செப்டம்பர் 21ம் தேதியன்று சென்னை மெட்ரோ ரயில் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா சற்றே தடுமாற்றத்துடனே நடந்து வந்து இருக்கையில் அமர்ந்தார். விழா முடிந்த பின்னர் உடனடியாக அறைக்கு திரும்பிய அவர், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட சில நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பான விவாதத்தில் 22ம் தேதி பங்கேற்றார் அன்று இரவு அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்கள் ப்ளாஷ் அடித்தன.
22ம் தேதி இரவில் இருந்தே தமிழகத்தில் அதிமுக தொண்டர்களிடையே ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது. நள்ளிரவில் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. முதல்வர் ஜெயலலிதா, காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது. அதைக் கேட்டு சற்றே ஆறுதல் அடைந்தனர் தொண்டர்கள்.
23ம் தேதி காலையில் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டது அப்பல்லோ. அந்த அறிக்கையில், முதல்வருக்கு காய்ச்சல் குணமாகிவிட்டதாகவும், அவர் சில தினங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் இரண்டாவது அறிக்கை சொன்னது. இந்த நிலையில் 25ம் தேதி மாலை மருத்துவர்கள் குழு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியது.
முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல்நலம் குணமாகிவிட்டாலும் சில நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அடுத்த சில தினங்களிலேயே அவர் நீண்ட நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டது அப்பல்லோ.

நோய் தொற்று
முதல்வர் ஜெயலலிதாவிற்கு நுரையீரலில் நோய் தொற்று இருப்பதாகவும் அதற்கான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட், எய்ம்ஸ் மருத்துவக்குழுவினர், சிங்கப்பூர் பிசியோ தெரபி மருத்துவர்கள் என ஒரு டஜனுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அமைச்சரவைக் கூட்டம்
அக்டோபர் 11ம் தேதி முதல்வர் வசமிருந்த பொறுப்புகள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வசம் மாற்றப்பட்டது. அமைச்சரவையை வழி நடத்திச் செல்லும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 19ம் தேதி முதலாவது அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி நிர்வாகத்திற்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு முன்பாக முதல்வர் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றிருந்தது.

அம்மாவின் ஆணைக்கிணங்க
இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் திங்கட்கிழமையன்று மாலை நடந்து முடிந்தது. ஒரு மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதாவின் படத்தை வைத்து, 32 அமைச்சர்களுடன் சுமார் ஒரு மணி நேரம் விவாதம் நடத்தினார் ஓ.பன்னீர் செல்வம். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக டெல்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில் தமிழகம் சார்பாக எடுத்து வைக்கப்பட உள்ள கருத்துகள், காவிரி விவகாரம், மத்திய அரசின் உதய் திட்டத்தில் இணைவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டம் தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அலுவல் ஆய்வுக்கூட்டங்கள்
அப்பல்லோவில் அமைச்சர்கள் தவமிருந்தாலும், கோவில்களில் பால்குடம் எடுத்தாலும் அவ்வப்போது அலுவல் ஆய்வுக்கூட்டங்களும் அமைச்சர்கள் நடத்துகின்றனர்.
ஊரகத்தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் நடத்திய துறை ரீதியான அலுவல் ஆய்வுக் கூட்டத்தின் மேஜையிலும் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்த விவாதத்தில் பட்டு வளர்ச்சித்துறை, கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக்கழகம் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கூட்டம்
தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் பட்டாசு விற்பனை மற்றும் பாதுகாப்பாக சேமித்து வைப்பது பற்றி துறை ரீதியான ஆலோசனைக்கூட்டம் நடத்தினார் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல். இந்த கூட்டத்தில் பிரதானமாக இடம்பெற்றிருந்தது ஜெயலலிதாவின் படம். துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை
83 பயணாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலகத்தில் அம்மா சாட்சியாக அவரது புகைப்படம் முன்பாக நின்று வழங்கினார்.

சத்துணவு திட்ட செயல்பாடுகள்
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, சத்துணவு திட்ட செயல்பாடுகள் குறித்து நடத்திய ஆய்வு கூட்டத்திலும் நடுநாயகமாக ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

கடந்த 2014ல் இதே நிலை
முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற போது முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. அப்போது முதல்வராக பொறுப்பேற்றார் ஓ. பன்னீர் செல்வம். மக்கள் முதல்வர் என்று அதிமுகவினரால் அழைக்கப்பட்டார் ஜெயலலிதா. அப்போதும் இதே போல அம்மாவின் ஆணைக்கிணங்கவே அறிவிப்புகள் வெளியானது. ஜெயலலிதாவின் புகைப்படத்தின் முன்பாகவே அரசியல் நிகழ்வுகள் நடைபெற்றன. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தின் கீழ் தமிழக அரசு இயங்குகிறது.

தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு தினங்களே உள்ளன. தமிழக மக்கள் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 35 நாட்கள் ஆகிவிட்டது. அவர் உடல்நலமடைந்து வருவதாக மருத்துவமனை அறிவிப்பு கூறினாலும் பண்டிகையை கொண்டாட ஜெயலலிதா போயஸ்கார்டன் செல்வாரா? அல்லது மருத்துவமனையிலேயே தீபாவளி கடந்து போகுமா என்பதுதான் அதிமுகவினரின் கவலையாக உள்ளது.
அம்மா படத்தை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினாலும் ஆச்சாரியமில்லை.












Click it and Unblock the Notifications