ஜெயலலிதா கவலைக்கிடம்.. பாஜக தலைவர் அமித் ஷா சென்னை வருகை
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பாஜக தலைவர் அமித் ஷா சென்னை வருகிறார்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து நேரில் கேட்டறிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சென்னை வருகிறார்.
கடந்த 75 நாட்களாக நுரையீரல் தொற்றுக் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினரும், அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சித் தலைவர்களும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தங்களது விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர். தேசிய அளவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா உள்ளிட்ட தலைவர்கள் ஜெயலலிதா உடல் நலம் பெற பிரார்த்தனை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று வெங்கய்யா நாயுடு, சென்னைக்கு நேரில் வந்து ஜெயலலிதா உடல் நிலை குறித்து விசாரிக்க உள்ள நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷாவும் சென்னை வர உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக கொச்சியில் இருந்த அமித் ஷா சென்னைக்கு புறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications