சந்திரபிம்பம் வளருவது போல ஜெ. உடல்நிலை தேறிவருகிறது: நாஞ்சில் சம்பத்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை 'சந்திரபிம்பம்' வளருவது போல தேறிவருவதாக அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் பிசியோதெரபி மருத்துவர்களும் அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இருப்பினும் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கடந்த 6 நாட்களாக மருத்துவமனை தரப்பில் எந்த ஒரு அறிக்கையும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் வருகை தந்தார்.
மருத்துவமனைக்குள் சென்று திரும்பிய நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், சந்திரபிம்பம் வளருவது போல ஜெயலலிதா உடல்நிலை தேறிவருகிறது என கூறினார்.
முன்னர், மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்வர் ஜெயலலிதா இருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவின் கண்காணிப்பில் தமிழகம் இருக்கிறது என நாஞ்சில் சம்பத் பஞ்ச் டயலாக் பேசியிருந்தது அதிமுக தொண்டர்களை முகம் சுளிக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.