ஜெ. உடல்நிலை விவகாரத்தில் வதந்தி பரப்பியதாக கைது செய்வது சரியானது அல்ல: ஹெச்.எல். தத்து
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்படுவது தவறானது என தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஹெச்.எல். தத்து கூறியுள்ளார்.
டெல்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நிறுவன நாள் விழா இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் தத்து கூறியதாவது:

அனைவருமே அதிகாரம் வேண்டும் என விரும்புகிறோம். தேசிய மனித உரிமைகள் ஆணையமும் கூடுதல் அதிகாரம் வேண்டும் என விரும்புகிறது. அப்படி அதிகாரம் கிடைத்தால்தான் புலி போல நாங்கள் உறும முடியும்.
அரசியல், ஜாதி உள்ளிட்ட எவை பற்றியும் கவலைப்படாமல் எங்களிடம் வரும் புகார்களை நாங்கள் விசாரிக்கிறோம். பொதுவாக 95-96 சதவீத வழக்குகளில் அரசுகளும் அதிகாரிகளும் எங்களது நோட்டீஸுகளுக்கு பதில் தருகின்றனர்.
கடந்த அக்டோபர் 2015 முதல் 2016 செப்டம்பர் வரை மொத்தம் 1,04,664 புகார்களை தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிவு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக 32,498 புகார்கள் போலீசாருக்கு எதிரானதாகும். என்கவுண்ட்டர் தொடர்பானவை 206 புகார்களாகும்.
இவ்வாறு ஹெச்.எல். தத்து கூறினார்.
பின்னர் தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளது மனித உரிமை மீறல் இல்லையா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இந்த நடவடிக்கைகள் தேவையற்றது. கைதுகள் மூலம் வதந்திகளுக்குத் தீர்வு காண முடியாது. மக்களுக்கு கருத்துகளைத் தெரிவிக்க சுதந்திரம் இருக்கிறது என்றார்.
ஹெச்.எல். தத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது முன்னுரிமை கொடுத்து விசாரணை நடத்தியது சர்ச்சையானது. அதை பொருட்படுத்தாமல் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு ஜாமீன் அளித்தவர் ஹெச்.எல். தத்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications