நெல்லை அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு - ஜெ. பிரசாரம் ரத்து
சென்னை: நெல்லை மாநகராட்சி மேயராக அ.தி.மு.க. வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவரது நெல்லை தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் 18-9-2014 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்காக போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வார் என 4-9-2014 அன்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் இ.புவனேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தூத்துக்குடி மாநகராட்சியில் 14-9-2014 ஞாயிற்றுக்கிழமையும், கோயம்புத்தூர் மாநகராட்சியில் 15-9-2014 திங்கட்கிழமையும் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications