‘புதன் ஓரை’... இதுக்கும் ஜெ. பதவியேற்புக்கும் என்ன சம்பந்தம்?
சென்னை : சொத்து குவிப்பு வழக்கில், நீதிபதி குன்ஹா தீர்ப்பு கூறிய நாள், லட்சுமி நரசிம்மர் அவதரித்த தினம் என்பதால், அதற்கு பரிகாரமாக ஜெயலலிதா பதவியேற்பு சம்பந்தமான அனைத்து நிகழ்ச்சிகளும் புதன் ஓரையிலேயே நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனது ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் மற்றும் தமிழக முதல்வர் பதவிகளை இழந்தார். இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்தது கர்நாடக உயர்நீதிமன்றம்.

இதையடுத்து அவர் மீண்டும் முதல்வராக இருந்த தடை நீங்கியது. எனவே, விரைவில் அவர் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் பதவியேற்பு தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் புதன் ஓரையிலேயே நடத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு கூறிய நாள் லட்சுமி நரசிம்மர் அவதரித்த தினம் என்பதாகும்.
எனவே, இதற்குப் பரிகாரமாகவே ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்பதற்கான நிகழ்ச்சிகள் அனைத்தும் புதன் ஓரையில் நடத்தப் படுகிறது.
அதாவது, எம்.எல்.ஏ.,க்கள் கூட்ட அறிவிப்பு கடந்த 15ம் தேதி, புதன் ஓரை வரும் நேரமான காலை 8:30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் 17ம் தேதி காலை 8:30 மணிக்கு புதன் ஓரையில் தன் பதவியை ராஜினாமா செய்தார். அன்று மாலை 4:00 மணிக்கு புதன் ஓரையில் ஆர்.கே.நகர் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ.க்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப் படும் ஜெயலலிதா, அடுத்த 6 மாதங்களில் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். எனவே, ஜெயலலிதா போட்டியிடுவதற்கு ஏதுவாகவே, அதிமுக கோட்டையான ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணிக்கு மேல் புதன் ஓரையில் ஜெயலலிதா 22ம் தேதி தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி அறிவிப்பு வெளியானது. அதேபோல், வரும் 22ம் தேதி காலை 7:00 மணிக்கு புதன் ஓரையில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
பின்னர், அன்று பகல் 2:00 மணிக்கு புதன் ஓரையில், தலைவர்கள் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்க உள்ளார். மறுநாள், 23ம் தேதி காலை 11:00 மணிக்கு புதன் ஓரையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
மேலும், தற்போது ஜெயலலிதாவின் ராசி எண், 5 என்பதால், 23ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுவதாகவும், அன்று அவருடன் 32 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்றும் அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications