ரூ.9 லட்சத்தில் 9 அடியில் ஜெயலலிதாவிற்கு சிலை.. ஆந்திராவில் தயாராகிறது
மறைந்த ஜெயலலிதாவிற்கு சிலை அமைக்க 2 எம்எல்ஏக்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சென்னை: மறைந்த ஜெயலலிதாவிற்கு 9 லட்சம் செலவில் 9 அடி உயரத்தில் சிலை அமைக்கும் பணி ஆந்திராவில் நடந்து வருகிறது.
ஜெயலலிதா உடல் நலமின்றி கடந்த 5ம் தேதி காலமானார். அவரது நினைவுகளுக்கு அதிமுக தொண்டர்கள் பல்வேறு வகையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதில் ஒரு வகையாக ஜெயலலிதாவிற்கு சிலை வைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
அரசியல் தலைவர்களின் சிலைகள் செய்வதில் புகழ்பெற்றவர் ஆந்திராவைச் சேர்ந்த பிரசாத். அவரிடம் 2 அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயலலிதா சிலை செய்ய பணம் முன்பணம் கொடுத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலைகள் செய்யும் பணி ஐதராபாத்தில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொம்முலூரு என்ற கிராமத்தில் தொடங்கிவிட்டது. 9 லட்சம் ரூபாய் செலவில் 9 அடி உயரத்தில் சிலைகள் அமைக்கும் பணி அங்கு நடைபெற்று வருகிறது.
ஆர்டர் கொடுத்த இரண்டு எம்எல்ஏக்களில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர். மற்றொருவர் புதுவையை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே சிலை செய்ய ஆர்டர் கொடுத்துள்ளதால், ஜெயலலிதாவின் சிலையை யார் முதலில் நிறுவுவது என்ற போட்டி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
எப்படியும் ஜெயலலிதாவின் சிலையை முழுமையாக செய்து முடிக்க 2 மாதங்கள் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.