புல்லட் பரிமளம் உள்ளிட்ட 3 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்: ஜெயலலிதா நடவடிக்கை
சென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லட் பரிமளம் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் 3 பேரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கட்சியின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த புல்லட் கே.பரிமளம் (மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்), பி.உமா மகேஸ்வரி (காஞ்சீபுரம் நகர 6-வது வார்டு செயலாளர்), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பி.பி.சாமிநாதன் (கபிலர்மலை ஒன்றிய செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கட்சி தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் உள்குத்து வேலைகளில் ஈடுபட்டு அதிமுக வேட்பாளர்களை தோல்வியடைச் செய்த நிர்வாகிகளை ஜெயலலிதா களையெடுப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் முதற்கட்டமாக காஞ்சிபுரம் , நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளை நீக்கி உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.