அழகிரி பற்றிய செய்திகளை பார்ப்பதும் இல்லை, படிப்பதும் இல்லை: மு.க. ஸ்டாலின்
நாமக்கல்: மின் தட்டுப்பாடு ஏற்பட காரணமான சதியை கவனிக்க முடியாத ஜெயலலிதா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு.
கேள்வி: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பற்றி?

பதில்: திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கேள்வி: எத்தனை தொகுதிகளை கைப்பற்றுவீர்கள்?
பதில்: 40 தொகுதிகளிலுமே வெற்றி பெறுவோம்.
கேள்வி: அனைத்து கட்சியினரும் 40க்கு 40 என்கிறார்களே?
பதில்: அவரவர் விருப்பத்தை தெரிவிக்கிறார்கள். நாங்கள் மக்கள் விருப்பத்தை பற்றி கூறுகிறோம்.
கேள்வி: திமுக 4வது இடத்திற்கு தள்ளப்படும் என்று மு.க. அழகிரி கூறியிருக்கிறாரே?
பதில்: அத்தகைய செய்திகளை பார்ப்பதோ, படிப்பதோ இல்லை.
கேள்வி: பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி அதிமுகவும், திமுகவும் தமிழகத்திற்காக எதையும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளாரே?
பதில்: முதலில் அவரை குஜராத்தில் அனைத்தையும் செய்துவிட்டு வர சொல்லுங்கள்.
கேள்வி: தமிழகத்தின் மின் தட்டுப்பாடு சதியால் ஏற்படுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
பதில்: அவர் முதல்வர் மட்டும் அல்ல. அவரது கட்டுப்பாட்டில் தான் காவல்துறை மற்றும் புலனாய்வுத் துறை ஆகியவை உள்ளன. அதனை கவனிக்க வேண்டியது அவரது வேலை. அதையும் மீறி சதி நடந்துள்ளது என்றால் அந்த பொறுப்பில் இருக்க அவருக்கு தகுதி இல்லை. அதனால் மரபுப்படி அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications