ஜெயலலிதா வீடு திரும்புவது எப்போது?: 3வது நாளாக மருத்துவர்கள் கண்காணிப்பு
சென்னை: உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் 3வது நாளாக சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா,தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், வழக்கமான உணவை உட்கொண்டார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மூன்றாவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் முதல்வருக்கு காய்ச்சல் இல்லை.வழக்கமான உணவுகளை சாப்பிடத் தொடங்கியுள்ளார்.மருத்துவர்களின் கண்காணிப்பில் முதல்வர் இருக்கிறார். என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்றே அவர் சென்னை போயஸ் கார்டனிலுள்ள தனது வீட்டுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. முதல்வருக்கு உடல் நிலை சீரடைந்தாலும்,அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் மருத்துவமனையிலேயே சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் வலியுறுத்தியதாகவும்,இதனை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா சிகிச்சையை தொடர்வதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் மூன்றாவது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா, இன்று மாலை வீடு திரும்பலாம் என தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியானது. அதில் முதல்வர் ஜெயலலிதா தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், வழக்கமான உணவை உட்கொண்டார் என்றும் கூறப்பட்டது. இருப்பினும் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையிலேயே எத்தனை நாட்களுக்கு இருப்பார்? எப்போது வீட்டுக்குச் செல்வார் என்பது பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.