சின்னமலை முதல் விமானநிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை: ஜெ., வெங்கைய்யா தொடக்கி வைத்தனர்
சென்னை: சென்னை விமானநிலையம் - மீனம்பாக்கம் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று கணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். முதல் ரயிலை அம்சவேணி என்ற பெண் ஓட்டுநர் இயக்கினார். விமானநிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர், கிண்டி மற்றும் சின்னமலை ரயில் நிலையங்களுக்கு இன்று திறந்துவிடப்பட்டன. விமானநிலையத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் வெங்கய்ய நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், 2 வழித் தடங்களில் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலம் வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.
முதலாவது வழித்தடத்தில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, 2வது வழித்தடத்தில் சின்னமலை - விமான நிலையம் இடையே மேம்பாலப் பணிகளும், முதல் வழித்தடத்தில் ஷெனாய் நகர் - கோயம்பேடு இடையே சுரங்கப் பாதை பணிகளும் விரைவுபடுத்தப்பட்டன.
இதில், சின்னமலை - விமான நிலையம் இடையிலான 8.6 கி.மீ. வழித்தடப் பணிகள் கடந்த ஜூலை மாதமே முடிவடைந்தது. ரயில் நிலையங்களில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வந்தன. இந்த வழித்தடத்தில் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் ஆய்வு நடத்தி, ரயிலை இயக்குவதற்கான அனுமதியை அளித்தார்.
இதையடுத்து கடந்த 2 மாதங்களாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலகம் மற்றும் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடக்க விழா நடைபெற்றது.
முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி விமான நிலையம் - சின்னமலை இடையேயான ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலை ஆகிய பகுதிகளில் உள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார். முதன்முறையாக சுரங்கப்பாதையில் ரயில் பயணித்தது.
மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விமான நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இரண்டாவதாக புறப்பட்ட ரயிலில் விமானநிலையத்தில் இருந்து அமைச்சர் வெங்கய்யா நாயுடு, அதிகாரிகள், செய்தியாளர்கள் பயணித்தனர்.
ஆலந்தூர் - கோயம்பேடு வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை சராசரியாக தினமும் 10 ஆயிரம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். 2-வது வழித்தடத்தில் சேவை தொடங்கப்படும் நிலையில், இந்த எண்ணிக்கை 15 ஆயிரமாக அதிகரிக்கும். ஆலந்தூரில் இரண்டு வழித்தடமும் இணைவதால், தற்போது விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடுக்கு பயணிகள் செல்ல முடியும்.
ஏற்கெனவே மெட்ரோ ரயில் நிர்வாகம் பயண தூரம் அடிப்படையில் கட்டணம் நிர்ணயித்துள்ளது. அதன்படி, விமான நிலையம் - சின்னமலைக்கு ரூ.40 எனவும், விமான நிலையம் - கோயம்பேடுக்கு ரூ.50 எனவும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.