மோடி-ஜெயலலிதா சந்திப்பின்போது "ராஜ்யசபா" உள்ளிட்ட அரசியல் ஒத்துழைப்பு பற்றியும் ஆலோசனை!
சென்னை: பிரதமர் நரேந்திரமோடியை வரும் செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசும்போது, தமிழக நலன் சார்ந்த விவகாரங்கள் ஆலோசிக்கப்படுவது மட்டுமின்றி, பாஜக மற்றும் அதிமுக ராஜ்யசபாவில் இணைந்து செயல்படுவது குறித்தும் இறுதி முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜூன் 3ம்தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அப்போது, தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இதைத்தாண்டி அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளும் அப்போது நடைபெறலாம் என்கின்றனர் பாஜக மற்றும் அதிமுக பிரமுகர்கள்.

மோடி மற்றும் ஜெயலலிதா இடையே நல்ல நட்பு இருந்தபோதிலும், ராஜபக்சேவின் வருகையால் மோடி பிரதமராக பதவியேற்றபோது ஜெயலலிதா டெல்லி செல்லவில்லை. இருப்பினும், இதன்காரணமாக இருவர் இடையேயான நட்பில் எந்த விரிசலும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. மக்களவையில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும், ராஜ்யசபாவில் மொத்தமுள்ள 240 இடங்களில் 64 மட்டுமே பாஜகவினர். எனவே மக்களவையில் நிறைவேற்றப்படும் சட்டத்தை ராஜ்யசபாவில் நிறைவேற்ற பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை.
எனவே ராஜ்யசபாவில் அதிமுக உள்ளிட்ட மாநில கட்சி எம்.பிக்கள் ஆதரவு பாஜகவுக்கு தேவைப்படுகிறது. பாஜகவுக்கு ராஜ்யசபாவில் ஆதரவு அளிக்குமாறு இந்த சந்திப்பின்போது மோடி, ஜெயலலிதாவிடம் வேண்டுகோள்விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பிரதிபலனாக தமிழகத்துக்கு தேவையான முக்கியமான திட்டங்களுக்கு ஜெயலலிதா அனுமதி பெற்று திரும்புவார் என்கின்றனர் அதிமுகவினர்.
பாஜகவுடன் இணைந்து செயலாற்றுவது குறித்து மூத்த மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் ரவிசங்கர்பிரசாத் ஆகியோர் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே டெல்லி செல்லும் ஜெயலலிதா இவ்விரு அமைச்சர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், "தேசிய நலனுக்காக பாஜக அரசு கொண்டுவரும் திட்டங்களை அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும் என்று நம்புகிறோம். அனைத்து தரப்பினரின் நம்பிக்கையையும் பெற்று நாடாளுமன்றத்தை நடத்துவதே பாஜக விருப்பம்" என்றார்.












Click it and Unblock the Notifications