ஜெ மறைவு: கடற்கரையில் ஒப்பாரி வைத்து கதறிய மீனவப் பெண்கள்!
முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு நாகை மாவட்ட மீனவப் பெண்கள் கடற்கரையில் ஒப்பாரி வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நாகை: முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு தமிழகம்முழுவதும் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. நாகை மாவட்ட மீனவப் பெண்கள் கடற்கரையில் ஒப்பாரி வைத்து கதறி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சென்னை அப்பல்லோ மருத்துவர்கள் குழு, லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவினர், சிங்கப்பூர் மருத்துவர்கள் ஆகியோர் சிகிச்சையளித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சிகிச்சைப் பலனின்றி முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தார். அவரது உடல்செ ன்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு ஒட்டு மொத்த தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு தமிழகம்முழுவதும் உள்ள மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த மீனவப் பெண்கள் ஒவ்வொரு வீதியிலும் முதல்வர் ஜெயலலிதான் உருவப்படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கடற்கரைக்கு ஊர்வலமாகச் சென்ற அவர்கள், தங்கள் குடும்பத்தில் யாரோ இறந்ததைப் போல மாரில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்து கதறினர். கடற்கரையில் அழுது புரண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.