ஜெயலலிதாவின் படத்தை வெளியிட்ட ஜெயானந்த்... ஆனா இது வேற படம்!
ஜெயலலிதாவுடன் தன்னுடைய தந்தை திவாகரன் இருந்த போட்டோவை ஜெயானந்த் முகநூலில் வெளியிட்டுள்ளார்.
சென்னை : ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற படத்தை வெளியிடுவேன் என்று கூறி வந்த ஜெயானந்த் முகநூலில் வேறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்த ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை, அ.தி.மு.க அணிகள் இணைப்புக்கு ஒரு நிபந்தனையாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வைத்தார். மேலும் சசிகலா குடும்பத்தினர் திட்டமிட்டே ஜெயலலிதாவை கொன்று விட்டதாகவும் அதிமுகவில் இருந்து விலகி வந்ததும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்
இதனால் சசிகலா தரப்பினர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சிகிச்சையின்போது ஜெயலலிதாவும் சசிகலாவும் பேசும் வீடியோ எங்களிடம் உள்ளது. அதை வெளியிட்டால், பன்னீர் செல்வம் தரப்பினர் என்ன செய்வார்கள் என திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது ஃபேஸ்புக்கில் எழுதி பரபரப்பை கிளப்பினார்.
பச்சை கவுனில் ஜெ. படம் இருக்கிறது
பச்சை கவுன் அணிந்து ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற படங்களை எதிர் கட்சியினர் உள்ளிட்ட யாரும் பார்க்கக்கூடாது என்பதால்தான் நாங்கள் வெளியிடவில்லை. சிங்கத்தை நாங்கள் சிங்கமாகவே ராஜமரியாதையுடன் அனுப்பிவைத்தோம் என்றும் ஜெயானந்த் அந்தப் பதிவில் கூறியிருந்தார்.
எச்சரிக்கை
ஓ.பி.எஸ் ஜெயலலிதாவை சவப்பெட்டியில் வைத்து ஓட்டுக் கேட்கிறார். உண்மை வலிமையானது. ஒருநாள் ஜெயலலிதா, சசிகலா இருவரும் மருத்துவமனையில் பேசிய வீடியோவை வெளியிட்டால்..? பி.ஹெச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன்..இவர்களை என்ன செய்யலாம்" என்று கொதிப்போடு கேட்டு இருந்தார் ஜெயானந்த்.
அரசியல் ஆசை
இதனைத் தொடர்ந்து அண்மையில் ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த ஜெயானந்த், தான் அரசியலுக்கு வர விரும்புவதாகக் கூறியிருந்தார். தன்னிடம் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை இருப்பதாகவும் கூறி மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஜெயலலிதா புகைப்படம்
இந்நிலையில் ஜெயானந்த் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். ஜெயலலிதா மேடையில் பேசும் அந்தப் புகைப்படத்தில் அருகில் தனது தந்தை திவாகரனை குறிப்பிட்டு அந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலுக்கு வருவேன் என்று ஜெயானந்த் கூறி வரும் நிலையில் ஜெயலலிதாவுடன் தனது தந்தை இருந்த புகைப்படத்தை போட்டு ஆதரவு திரட்டுகிறாரா ஜெயானந்த் என்பதே அனைவர் மனதிலும் எழுந்துள்ள கேள்வி.