எனது தலையில் அடித்து சேலையைப் பிடித்துக் கிழித்தனர்.. ஜான்சி, கௌரி மீது ஹசீனா புகார்
ஜான்சி ராணி என் தலையில் அடித்தார் என்று மகளிர் காங்கிரஸின் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத் புகார் கூறியுள்ளார்.
சென்னை: காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் அணி நிர்வாகிகள் நேற்று ஆபாசமாக பேசி சண்டை போட்டனர். ஜான்சிராணிதான் தன்னுடைய தலையில் தாக்கினார் என்றும் என்னுடைய சேலையை கிழித்தனர் என்றும் ஹசீனா சையத் குற்றம் சாட்டியுள்ளார்.
சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று திருநாவுக்கரசர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத், மாநிலத் தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவள்ளூர் மகிளா காங்கிரஸ் நிர்வாகி கௌரி கோபாலை பதவியில் இருந்து நீக்கிவிட்டனர். இதற்குப் பரிந்துரை செய்தது ஹசீனாதான் என மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் பேசி வந்தனர்.

சண்டை களமான சத்தியமூர்த்தி பவன்
நேற்று நடந்த கூட்டத்துக்கு கௌரி கோபாலும் வந்திருந்தார். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென ஹசீனா மீது பாய்ந்து அவரை அடித்ததாக கூறப்படுகிறது. கௌரி கோபாலுக்கு ஆதராவாக ஜான்சிராணியும் இருந்தாராம். இருவரும் சேர்ந்து அடிக்கவே, ஹசீனா, தனது கணவருக்குப் போன் செய்திருக்கிறார்.

ஹசீனாவின் கணவர்
சம்பவ இடத்துக்கு வந்த ஹசீனாவின் கணவர், மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணியை ஆபாசமாக பேசி அடித்தார். கௌரி கோபாலையும் தாக்கினார்.

தலையில் தாக்கினர்
நடந்த சம்பவம் பற்றி ஊடகங்களில் பேசியுள்ள ஹசீனா சையத், எனக்கும் ஜான்சி ராணிக்கும்தான் பிரச்னை. கூட்டம் முடிந்து நடந்து சென்று கொண்டிருந்தேன். திடீரென என்னுடைய பின்பக்கத்தில் வந்து தலையில் தாக்கினார் கௌரி.

திருநாவுக்கரசரிடம் புகார்
இந்தத் தாக்குதலை நான் எதிர்பார்க்கவில்லை. எதற்காக என்னை அடித்தார் என்று தெரியவில்லை. உடனே, தலைவரிடம் சென்று நடந்த சம்பவத்தைக் கூறினேன். அவர் விசாரிப்பதாக கூறினார்.

சேலையை கிழித்தனர்
மீண்டும் என்னைத் தாக்குவதற்கு வந்தார் ஜான்சி ராணி. உடனே, என் கணவருக்குப் போன் செய்து வரவழைத்தேன். அதற்குள் என் சேலையைக் கிழித்துவிட்டனர்.

அடி வாங்க வேண்டுமா?
நான் யாருக்கும் எந்த துரோகமும் செய்ததில்லை. அரசியலுக்கு வந்தால் இப்படியெல்லாம் அடி வாங்க வேண்டுமா எனக்கு நியாயம் கிடைக்கும் வரை விடமாட்டேன் என்று கூறியுள்ளார் ஹசீனா.












Click it and Unblock the Notifications