கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் அத்துமீறி நுழைந்த ஜார்கண்ட் வாலிபர்
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலைய பகுதியில் அத்துமீறி நுழைந்த ஜார்கண்ட் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரது பின்னணி குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் மற்றும் பணகுடி அருகே மகேந்திரகிரி இஸ்ரோ மையம் ஆகியவை அமைந்துள்ளன. இவற்றில் 24 மணி நேரமும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த இரண்டு இடங்களும் வெளியாட்கள் யாரும் எளிதில் நுழைய முடியாத பலத்த பாதுகாப்பு பகுதியில் உள்ளது. கடந்த வாரம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்திற்குள் அத்துமீறி நுழைந்த கிள்ளியூர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமாரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் கூடங்குளம் பகுதியில் வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடங்குளம் சுற்றுப்புறத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் இருந்த போது அங்கு சந்தேகமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ஜார்கண்ட் மாநிலம் மோண்டி கிராமத்தை சேர்ந்த சுக்தேவ் என்பது தெரிய வந்தது.
அவரை கைது செய்து வள்ளியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இரவில் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டதால் மனநல பிரிவில் அவரை சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர். சுக்தேவ் எதற்காக கூடங்குளம் வந்தார், அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டது என்றால் கூடங்குளத்திற்கு மட்டும் எப்படி குறிப்பாக வர முடிந்தது என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications