வருகிறார் ஜான் பாண்டியன்.. அதிமுகவுக்கு ஆதரவாக ஏற்காட்டில் களம் புகுகிறார்
முன்பு இவர் சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியை எதிர்த்து அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டனர். அந்தத் தேர்தலி்ல அங்கு பெரும் வன்முறை வெடித்தது. மயிரிழையில் பரிதி வென்றார்.
இன்று அதே பரிதி அதிமுகவில் இருக்கிறார். ஜான் பாண்டியன் அதிமுகவை ஆதரித்துப் பிரசாரம் செய்யப் போகிறார்.
இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்து உள்ளது. அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை ஆதரிப்போமோ என்பதை இப்போது சொல்ல முடியாது.
தஞ்சையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்தது தவறு. அதனை இடித்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி பரமக்குடியில் காவல் துறையினரால் 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது பற்றி விசாரணை நடத்துவதற்காக நீதிபதி சம்பத் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் ஒரு இடத்தில் காவல் துறையை பாராட்டியும், இன்னொரு இடத்தில் காவல் துறையை கண்டித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், சம்பத் கமிஷன் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். உச்ச நீதிமன்றத்திலும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி சார்பில் மாவட்டம் தோறும் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி மாநாடு நடத்தப்பட உள்ளது என்றார்.