செய்தி வெளியிட்டால் வழக்கா?... போலீஸைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆவேச ஆர்ப்பாட்டம் - கைது
காவல்துறையினர் செய்தியாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை உடனடியாக திரும்ப பெறக்கோரி நெல்லை மாவட்ட எஸ்.பி அலுவலக வளாகத்தில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: செய்தி வெளியிடும் செய்தியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வதைக் கண்டித்து, நெல்லை, மதுரை, தூத்துக்குடியில் செய்தியாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
என்னை கேட்காமல் பனகுடியில் யாரும் செய்தி போடக்கூடாது என்று பனகுடி காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோன்ஸ் மிரட்டுவதாக செய்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைக் கண்டித்து செய்தியாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் தரப்பில் கூறப்படும் புகார்: இஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில், இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாறை ஒன்றில் பிளவு ஏற்பட்டது என்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதிய தலைமுறை தொலைக்காட்சி வள்ளியூர் செய்தியாளர் ராஜு கிருஷ்ணா மற்றும் நெல்லை செய்தியாளர் நாகராஜன் கந்தன், தினகரன் பணகுடி செய்தியாளர் ஜெகன் ஆகியோர் செய்தி அனுப்ப அது தொலைக்காட்சியிலும், தினகரன் நாளிதழிலும் வெளிவந்து இருக்கிறது.

செய்தியாளர்கள் மீது வழக்கு
இந்த செய்தி கண்டு கொதித்து எழுந்த பனகுடி காவல் நிலைய ஆய்வாளர் ஸ்டீபன் ஜோன்ஸ் உடனடியாக பாறை பிளவுக்கு என்ன காரணம் என்று ஆராயவில்லை. மாறாக செய்தியாளர்கள் மீது நான்கு பிரிவுகளின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இருக்கிறார். நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபப்ட்டுள்ளது.

செய்தியாளர்கள் மீது எப்ஐஆர்
இஸ்ரோ சார்பில் எந்த ஒரு புகாரும் கொடுக்கப்படவில்லை. இஸ்ரோ பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் ஒரு புகாரை பெற்றுக்கொண்டு எப்ஐஆர் பதிவு செய்து இருக்கிறார். ஆனால் மேல் அதிகாரிகளுக்கு தகவல் சென்றதை அடுத்து அந்த புகாரை திரும்ப பெற சிஐஎஸ்எப் அதிகாரிகளுக்கு உத்தரவு வந்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலரிடம் புகார்
ஆனால் அதை திருப்பி கொடுக்காத ஜோன்ஸ், எதுக்கும் பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று கிராம நிர்வாக அலுவலரிடம் ஒரு புகாரை பெற்றுக்கொண்டு எப்ஐஆர் பதிவிட்டு உள்ளார். ஆனால் அதன் நகல் இதுவரை செய்தியாளர்களுக்கு தரப்படவில்லை. இதற்கிடையில் இஸ்ரோ சார்பில் ஒரு குழு பாறை உடைந்ததாக கூறப்பட்ட இடத்திற்கு சென்று அங்கு ஆய்வு நடத்தி உறுதிப்படுத்தி அதனை சோதனைகளுக்காக மாதிரி எடுத்து சென்று இருக்கிறார்கள்.

பணகுடி இன்ஸ்பெக்டர் ஜோன்ஸ்
பாறை பிளவுபட்டபோது வெடிச்சத்தம் கிராம மக்களுக்கு கேட்டதன் பேரிலேயே அதை மொபைல் போனில் பதிவு செய்து அங்கிருந்த யாரோ ஒருவர் செய்தியாளர்ககளுக்கு அளித்துள்ளார். மேலும், விபத்து நடந்தது இஸ்ரோவில் என்று புதிய தலைமுறை செய்தியில் குறிப்பிடப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் செய்தியாளர்கள் மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளதுடன் செய்தியாளர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார் இன்ஸ்பெக்டர் ஜோன்ஸ்.

மறைமுக மிரட்டல் விடுப்பதா?
உப்புச்சப்பில்லாத ஒரு செய்திக்காக ஜோன்ஸ் இவ்வளவு மெனக்கடுவது ஏன் என்று நெல்லை மாவட்ட காவல்துறையினருக்கே விளங்கவில்லை. அதே சமயம், இதன் காரணமாக செய்தியாளர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியதுடன், மறைமுக மிரட்டலும் விடுக்கப்பட்டு இருக்கிறது என்பது உறுதியாகிறது. எப்போது வேண்டுமானாலும் கைது செய்வார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்தி செய்தியாளர்களின் அன்றாட கடமைகளை செய்யாமலும் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

செய்தியாளர்களை முடக்குவதா?
புதிய தலைமுறை, தினகரன் போன்ற செய்தி ஊடக நிறுவனத்தின் ஒரு மாவட்ட பொறுப்பு செய்தியாளரை இப்படி முடக்க எண்ணுவது ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் கூட கிடையாது. அவதூறு வழக்குகள் மட்டுமே போடப்படும். ஆனால், பனகுடி காவல் ஆய்வாளர் செய்தியாளர்கள் மீது குற்றப்பிரிவுக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். 469 , 505 , 507 , ஐ.டி.பி.சி 67 . ஆகிய பிரிவுகள் பதியப்பட்டுளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விளக்கம் கேட்க வேண்டும்
செய்தி வெளியாவதற்கு செய்தியாளர்கள் மீது வழக்கு தொடுக்கும் உலக அதிசயத்தை உருவாக்கி இருக்கிறார் பனகுடி ஆய்வாளர் ஜோன்ஸ். கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்னதாக நக்கீரன் இதழ் தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதி மன்றம் தெளிவான வகையில் தீர்ப்பு சொல்லி இருக்கிறது. தவறான செய்தி வெளியாகிறது என்றால் அதற்கு முதலில் ஊடக நிறுவனத்திடம் விளக்கம் கேட்க வேண்டும். விளக்கம் தர நிறுவனம் தவறும் பட்சத்தில் நீதி மன்றத்தை அவதூறு என்ற அடிப்படையில் அணுகலாம். அவ்வாறு கோராத நிலையில் செய்தியை வெளியிடவே கூடாது என்று தடை கோர முடியாது. என்று தன் தீர்ப்பில் நீதிபதிகள் தெளிவாக தெரிவித்து இருக்கிறார்கள்.

மிரட்டி பணியவைப்பதா?
எனவே, செய்தி நிறுவனத்திடம் விளக்கமும் கேட்காமல், விளக்கமும் பெறாமல் நீதி மன்றத்தையும் நாடாமல், குற்ற வழக்குகளை கொண்டு செய்தியாளர்களை மிரட்டிப் பணிய வைக்க எண்ணுவது முழுக்க முழுக்க இந்திய தண்டனை சட்டத்தை தன் கைகளில் பனகுடி ஆய்வாளர் ஜோன்ஸ் எடுத்துக்கொண்டுள்ளார் என்பதையே உணர்த்துகிறது.

காவல்துறையினர் நடவடிக்கை
பத்திரிகை, ஊடக ஜனநாயகத்தை இதைவிட கழுத்தை பிடித்து நெரித்து அழிக்கும் நடவடிக்கைக்கு வேறு உதாரணம் தேவை இல்லை. தமிழ்நாடு அரசின் உயர் காவல் அதிகாரிகள் இதில் தலையிட்டு கண்ணியம் மிக்க தமிழ்நாடு காவல் துறையின் மாண்பை காப்பாற்ற வேண்டும் என்பதுடன், உடனடியாக எப்ஐஆர் ஐ ரத்து செய்ய உத்தரவிட்டு செய்தி துறையினர் தங்கள் கடமை ஆற்ற விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நெல்லையில் செய்தியாளர்கள் ஆர்பாட்டம்
மகேந்திரகிரி இஸ்ரோ மையம் அருகே மலையில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக செய்தி வெளியிட்ட பணகுடி பத்திரிக்கையாளர்கள் மீது ஜாமீனில் வரமுடியாத வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், எஸ்பியிடம் முன்னதாகவே விளக்கி கோரிக்கை விடுத்தும் கைது மிரட்டல் விடுவதை கண்டித்தும் நெல்லை பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு நெல்லை எஸ்பி அலுவலம் முற்றுகை போராட்டத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு நல சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டம் செய்தால் கைதா?
பொய் வழக்கு போடப்பட்டதைக் கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்களை போலீசார் கைது செய்தனர். வழக்குபதிவு செய்வதை தட்டிக்கேட்டால் கைது செய்வதா? என்று செய்தியாளர்கள் கொந்தளித்துப்போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications