இசைப்பிரியா படுகொலையை கண்டித்து தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி: தமிழீழ செய்தியாளர் இசைப்பிரியா படுகொலையை கண்டித்து தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கையில் சிங்கள ராணுவத்திடம் சிக்கிய இலங்கை தமிழ் ஊடக செய்திவாசிப்பாளர் இசைபிரியா உயிருடன் கைது செய்யப்பட்டு மிக கொடூரமான முறையில் கொலை செய்த வீடியோ அண்மையில் வெளியானது. இந்த கொடூர செயலைக் கண்டித்து தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்த தடை விதிப்பதுடன், காமன்வெல்த் அமைப்பிலிருந்தே இலங்கையை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், இந்தியா அம்மாநாட்டில் பங்கேற்க கூடாது என்பது பத்திரிகையாளர்களின் கோரிக்கைகள். இதை வலியுறுத்தி தூத்துக்குடி பாளை சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.

பிரஸ் மீடியா அசோசியேஷன் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் ராமசந்திரன், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் வழக்கறிஞர் சந்தணசேகர், ஐஜேக மாவட்ட பொருளாளர் இசக்கிராஜா உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். பிரஸ் மீடியா அசோசியேஷன் துணைத் தலைவர் ராஜாசாலமோன், இணைச் செயலாளர் உலகாள்வோன், வழக்கறிஞர் மாடசாமி, மூத்த பத்திரிக்கையாளர்கள் குமாரவேல், நாசரேத் முருகன் உள்ளிட்ட செய்தியாளர்கள், புகைப்பட வீடியோ கலைஞர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications