நெல்லை: கலெக்டர் அலுவலகத்தில் ஷாக் அடித்து உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய பத்திரிகையாளர்கள்
நெல்லை: நெல்லையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய தனியார் நிறுவன ஊழியரின் உயிரை அங்கிருந்த செய்தியாளர்கள் காப்பாற்றினர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ராட்சத விளம்பர பலகை ஒன்று அமைந்துள்ளது. இந்த விளம்பர பலகையின் மீது ஏறிய தனியார் நிறுவன ஊழியர் விளம்பர போர்டின் அளவுகளை தகரத்திலானா டேப் மூலம் அளந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின் வயரில் டேப் சிக்கியதால் அவரை மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஊழியர் விளம்பர போர்டை பிடித்தபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை தற்செயலாக பார்த்த புகைப்படக்காரர் கண்ணன், அங்கு நின்று கொண்டிருந்த பிற செய்தியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு தனியார் நிறுவன ஊழியரை பாதுகாப்பாக மீட்டனர்.
விபத்தில் சிக்கியவர் மேல இலந்தகுளத்தைச் சேர்ந்த சண்முகவேல் என்பது தெரியவந்தது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த செய்தியாளர்களின் இந்த மனிதாபிமான செயலை அவ்வழியாக சென்ற பொது மக்களும், வருவாய் துறை ஊழியர்களும் பாராட்டினர்.