ஓவர் வொர்க்... சென்னை குடும்பநல கோர்ட்டிலேயே மயங்கி விழுந்த பெண் நீதிபதி
சென்னை: கூடுதல் பணிச்சுமை காரணமாக சென்னை குடும்பநல நீதிமன்ற நீதிபதி திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஒரு முதன்மை குடும்பநல நீதிமன்றம் மற்றும் 3 கூடுதல் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் 2 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். ஒரு நீதிபதி நேற்று விடுப்பில் சென்று விட்டார்.
இதனால் முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி சாருஹாசினி தனது நீதிமன்றம் உட்பட மற்ற 3 நீதிமன்றங்களையும் சேர்த்து சுமார் 300 வழக்குகளையும் விசாரிக்க வேண்டியதாயிற்று. இந்நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு விசாரணையைத் தொடங்கினார்.
இடைவெளி விடாமல் தொடர்ந்து வழக்குகளை விசாரித்ததால், சாருஹாசினிக்கு பிற்பகல் 2 மணியளவில் தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் விசாரணையை பாதியில் நிறுத்தி விட்டு தனது அறைக்கு புறப்பட்டார். ஆனால் தொடர்ந்து நடக்க இயலாமல் மேடையிலேயே அவர் மயங்கி விழுந்தார்.
அப்போது தனது வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்த பெண் மருத்துவர் ஒருவர் உடனடியாக சாருஹாசினியைச் சோதித்தார். மேலும், ஹைகோர்ட் வளாகத்தில் இருந்த பெண் மருத்துவரும் உடனடியாக வரவழைக்கப்பட்டார்.
பின்னர் நீதிபதிக்கு சாக்லேட் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை கொஞ்சம் தேறியது.
இதற்கிடையே நேற்று காலை சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு வக்கீல் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். அவர், ‘‘சென்னை குடும்பநல கோர்ட்டின் முதன்மை கோர்ட்டு நீதிபதி மற்றும் 3-வது கூடுதல் கோர்ட்டு நீதிபதி ஆகியோர் 14.9.15 அன்று இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். அந்த இடங்கள் இன்னும் காலியாக உள்ளன.
இரண்டாம் கூடுதல் கோர்ட்டு நீதிபதி கலைமதி கடந்த வாரம் விடுப்பில் சென்று விட்டார். எனவே நீதிபதி சாருஹாசினி மட்டுமே அனைத்து பொறுப்பையும் (வழக்கு விசாரணை, நிர்வாகப்பணி உள்ளிட்டவை) கவனிக்க வேண்டியதுள்ளது. இதை கருத்தில் கொண்டு அங்கு நீதிபதிகளை உடனே நியமிக்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி, ‘‘இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டிருக்கிறேன். விரைவில் அங்கு நீதிபதி நியமிக்கப்படுவார்'' என்று கூறினார்.