கே பாலச்சந்தருக்கு டயாலிஸிஸ்... தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிப்பு
சென்னை: இயக்குநர் கே.பாலசந்தருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தொடர்கிறது. சிறுநீரகம் பழுதடைந்ததால் நேற்று அவருக்கு டயாலிஸிஸ் செய்யப்பட்டது.
காய்ச்சல் காரணமாக, கடந்த வாரம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல், அவருடைய உடல்நிலை மோசமானது.
நேற்று முன்தினம் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருடைய நிலைமை கவலைக்கிடமானது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
நேற்று அவருக்கு, ‘டயாலிசிஸ்' செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கவலைக்கிடமான நிலையில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
நேற்று நடிகர் சங்க தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார், சிவகுமார், பிரகாஷ்ராஜ், விவேக் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று கே.பாலசந்தரின் உடல்நிலை பற்றி விசாரித்தார்கள்.
பாலச்சந்தர் உள்ள அறைக்கு இப்போது அவரது குடும்பத்தினர் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள்.