அரசு மருத்துவர்களின் ஓய்வு வயதை நீட்டிப்பது எந்த வகையிலும் சரியானது அல்ல: கி,வீரமணி
சென்னை: மத்திய, மாநில அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 65 வயதாக உயர்த்தக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்த்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பு முடித்துவிட்டு, அரசு பணிக்காக காத்திருப்போர் பல ஆயிரகணக்கானோர் இருக்கும் நிலையில், ஏற்கெனவே பணியாற்றும் மருத்துவர்களுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு என்பது எந்த வகையிலும் சரியானது அல்ல.
மேலும், மத்திய அரசுக்கு உட்பட்ட துறையில் 27 சதவீதம் இடஒதுக்கீடு பெற்று வரும் நிலையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மருத்துவர்களின் பதவி உயர்வும் பாதிக்கப்படும். எனவே, மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.